படர்தாமரை பற்றி என்ன தெரியும் உங்களுக்கு..!!
படர்தாமரை புழு பூச்சிகளால் வருவதல்ல. அது பூஞ்சைகளின் தொற்றுக்களால் சருமத்தில் உருவாகும். சில வகை பூஞ்சைகள் சருமத்தில் தொற்றிக் கொள்ளும்போது, எதிர்ப்பு செல்கள் அதனை எதிர்க்கும். அப்போது வரும் ஒவ்வாமையே தோல் சிவந்து எரிச்சல் தருவதாகும்.
பரவும் நிலை : சருமத்தில் தொற்று ஏற்பட்ட இடத்தில் வட்ட வடிவமாக சிவந்து தடித்து காணப்படும். பின்னர் அங்கிருந்து உடலில் எல்லா இடத்திற்கும் பரவக் கூடியது. ஸ்கால்ப், கால், பாதம், இடுப்பு, தொடையின் உள்புறம் என காற்று பூகாத இடங்களில் பூஞ்சை உருவாகும்.
படர்தாமரை உருவாக காரணம் என்ன? பொதுவாக சில வகை பூஞ்சை மண்ணில் உருவாகும். அவ்வாறு பூஞ்சை உருவான மண்ணில் விளையாடினால், அல்லது வேலை செய்தால், இந்த தொற்று ஏற்படும்.
அல்லது ஏற்கனவே படர்தாமரையில் பாதிக்கப்பட்டவர்களிடமிருந்தும் மற்றவர்களுக்கு பரவும்.
யாருக்கெல்லாம் இந்த பாதிப்பு ஏற்படும் : இந்த படர்தாமரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.
பொதுவாய் சிறுவர்களுக்கு அதிகமாய் வர வாய்ப்புண்டு, அவர்கள் மண்ணில் விளையாடும் போது, அல்லது பூனைகளை கொஞ்சும் போது என வரலாம்.
படர்தாமரையின் அறிகுறிகள் : வட்ட வடிவமாக சிவந்து காணப்படும். சருமம் தடித்திருக்கும். தொற்று ஏற்பட்ட இடங்களில் அரிப்பு மற்றும் எரிச்சல் ஏற்படும். படர் தேமல் நகங்களில் உண்டாயிருந்தால், நகத்தின் நிறம் மஞ்சள் நிறமாய் மாறியிருக்கும்.
தலையில் ஏற்பட்டிருந்தால், அங்கே முடி உதிர்ந்து சொட்டை ஏற்பட்டிருக்கும். மருத்துவ பரிசோதனை : பாதிக்கப்பட்ட சருமத்தினை லேசாக கீறி, அதனைக் கொண்டு ஆய்வு கூடத்தில் பரிசோதனை செய்து உறுதிபடுத்துவார்கள்.
சிகிச்சை : படர்தாமரை எளிதில் குணப்படுத்தக் கூடியதே. இதற்கு தகுந்த பூஞ்சையை எதிர்க்கும் க்ரீம்களே போதுமானது.
அதனுடன், வீட்டிலும் சருமத்தை பாதிக்காதவாறு பருத்தி துணிகள் அணிய வேண்டும். காற்று படுமாறு வைத்துக் கொள்ளவேண்டும்.
சருமத்தில் ஈரப்பதம் இருந்தால் பூஞ்சை எளிதில் பெருகிவிடும். ஆகவே எப்போது உலர்ந்து இருக்கும்படி, காற்று படுமாறு வைத்துக் கொண்டால் வேகமாய் குணமாகிவிடும்.
Average Rating