குட்டி தீவுகளாக காட்சியளிக்கும் மூன்று நாடுகள்!.. அச்சத்தில் மக்கள்…!!
ஐரோப்பிய நாடுகளான பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்துள்ளது. மழைக்கு 14 பேர் பலியாகியுள்ளனர்.
கடந்த இரண்டு தினங்களாக பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் பெய்த மழை கடும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளதுடன் அங்குள்ள Seine நதியின் நீர்மட்டம் கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு உயர்ந்து வருகிறது.
தற்போது வரை நதியின் நீர்மட்டமானது 19 அடிகள் வரை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சிலப் பகுதிகளில் மழை நீர் நகருக்குள் புகுந்ததால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
தாழ்வான சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி காணப்படுகின்றன. ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல தற்போது சிறிய ரக படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
பாரீஸ் நகரில் உள்ள Seine நதியின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதால், பொதுமக்கள் யாரும் நதிக்கரைக்கு அருகே செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தொடர்ந்து பெய்து வரும் கனமழைக்கு இதுவரை பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் ஆகிய நாடுகளில் 14 பேர் பலியாகியுள்ளனர். தென் ஜெர்மனியிலுள்ள பல நகரங்களும், பெல்ஜியமும், போலந்தும் இந்த வெள்ளத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. கனமழையால் பாரீஸ் நகரம் குட்டி தீவுப் போல் மாற்றியுள்ளது. பாரீஸ் நகரிலுள்ள பிரபல லோவுர் அருங்காட்சியம் மற்றும் ஒர்சே அருங்காட்சியம் மூடப்பட்டுள்ளன.
வெள்ளச் சேதங்களை பார்வையிட சென்ற பிரான்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சர் ராயல், கனமழைக்கு பாரீஸ் நகரம் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளதால் ஆபத்தில் சிக்கி மேலும் பலர் உயிரிழந்திருக்கலாம் என அச்சம் தெரிவித்துள்ளார்.
Average Rating