5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் குப்பி விளக்கில் கல்வி கற்கும் அவலம்..!!
சுமார் ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மின்சார வசதியின்றி மண்ணெண்ணெய் விளக்குகளிலான குப்பி விளக்கு வெளிச்சத்தில் கல்வியை தொடர்வதாக மின்சக்தியின் புதிய சக்திவள அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். உடதும்பறையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர், ‘மின்சார சபை இலாபமீட்டும் ஒரு நிறுவனம். ஆனாலும் நாம் சேவை அடிப்படையில் அதனைப் பெற்றுத் தர விரும்புகின்றோம். உடதும்பறை போன்ற பின் தங்கிய பகுதிகளில் மின்சாரம் வழங்க எமக்கு கொடுப்பனவுத் தொகையை அதிகரிக்க முடியும்.
ஆனால் பொதுச்சேவை என்ற வகையில் நாம் அதனைச் செய்யவில்லை. வெளிநாட்டு உதவிகளுடன் உங்கள் இல்லங்களுக்கு அதனைக் கொண்டு வந்து தந்துள்ளோம். பொதுச்சேவைகள் சிற்சில சந்தர்பங்களுக்கு மட்டுமே தேவைப் படுகின்றன. இன்று மின்சாரமே எல்லாத் துறைகளிலும் செல்வாக்கு செலுத்துகிறது.
எனவே, அதிகரித்த மின் பாவனையை ஈடுசெய்யும் வகையில் சிறு மின் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேநேரம், சிறு மின் உற்பத்தி நிலையங்களில் உற்பத்திச் செய்யப்படும் மின்சாரத்தை மிக நியாயமான பணத்திற்கு கொள்வனவு செய்யவும் மின்சார சபை தயாராக உள்ளது.
இன்று 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் மின் வசதியின்றி குப்பிலாம்பு வெளிச்சத்தில் கல்வியைத் தொடர்வதாக நாம் அறிவோம். அது மட்டுமில்லாது நவீன தொழில் நுட்ப முறைகளில் அமைந்த கணனி முறைகளையும் அவர்களால் மேற்கொள்ள முடியாதிருக்கின்றது. இதனால் கல்வியில் சம வாய்ப்பை வழங்க முடியாத ஒரு நிலை அமைந்துள்ளது’ எனவும் தெரிவித்துள்ளார்.
Average Rating