கண்களில் ஏற்படும் கருவளையத்தைப் போக்கும் ஹஸ்த பாதாசனா- தினம் ஒரு யோகா..!!
கருவளையம் என்பது நிறைய பேர் அழகு சம்பந்தப்பட்டதாகவே பார்க்கிறார்கள். உடலில் பாதிப்பு ஏற்படும்போது கருவளையம் வருகிறது. உங்கள் உடலில் ரத்த ஓட்டம் குறைவாக இருக்கும் போது ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்படும். அந்த சமயங்களில் கருவளையம் தோன்றும்.
அதை தவிர்த்து, தூக்கமில்லாமல் இருப்பது, அதிக வேலைப் பளு, உடலில் நீர்பற்றாக்குறை, அதிக நேரம் டீவி பார்ப்பது என சொல்லிக் கொண்டேபோகலாம். கருவளையம் வந்தால் தோற்றத்தின் அழகு கெடும் என்பது உண்மை என்றாலும் இது ஆரோக்கியமும் சார்ந்தது.
யோகா உடலுக்கு எவ்வளவு நன்மைகள் தருகின்றது எனப் பார்த்தால் கணக்கிலடங்காது. அப்படி கருவளையத்தை போக்கவும் கூட யோகா பயன்படுகிறது.
ஹஸ்தபாதாசனா : ஹஸ்தபாதாசனா. உடலை குனிந்து தரையை தொடும் இந்த ஆசனத்தால், ரத்த ஓட்டம் உடனடியாக கண்களுக்கு செல்கின்றது. இதனால் மாதக்கணக்கில் போகாமல் இருக்கும் கருவளையம் சில நாட்களிலேயே போய்விடும். அந்த அளவுக்கு பலனைத் தருகின்றது இந்த ஹஸ்த பாதாசனா. எப்படி செய்வது என பார்க்கலாம் :
செய்முறை : நேராக நின்று மூச்சை இழுத்து மெதுவாக விடுங்கள். பின்னர் கால்களை விரித்து நிற்க வேண்டும். கைகளை மெதுவாக நேராக நீட்டி, பின்னர் மேலே தூக்குங்கள்.
பிறகு கால்களை நேராக வைத்து, முட்டியை வளைக்காமல் நிற்க வேண்டும். பின் மெல்ல குனியுங்கள். குனிந்து உங்கள் உள்ளங்கைகளால் தரையை தொடுங்கள். உடனடியாக உங்களால் தரையை தொட முடியவில்லையென்றால் சிரமப்பட வேண்டாம்.
முதலில் விரல்களால் தொட்டு பயிற்சி பெறுங்கள். பின்னர் மெது மெதுவாக முழு உள்ளங்கையையும் தரையில் ஊன்ற வேண்டும்.
முகம் உங்கள் முட்டியை தொடுமாறு பாத்துக் கொள்ளுங்கள். இப்போது ஆழமாய் மூச்சினை இழுத்து மெதுவாக விடவேண்டும். பின்னர் மெதுவாய் எழுந்து இயல்பு நிலைக்கு வாருங்கள்.
பலன்கள் :
ரத்த ஓட்டம் அதிகமாக முகத்திற்கு பாயும். முதுகுத் தண்டிற்கு பலம் சேர்க்கும். முதுவலியை தீர்க்கும். கருவளையம் நீக்கும். முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.
Average Rating