காதலியை கொன்ற வழக்கில் ஆஸ்கர் பிஸ்டோரியசுக்கு என்ன தண்டனை? வாதம் தொடங்கியது…!!
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த முன்னணி மாற்றுத்திறனாளி ஓட்டப்பந்தய வீரரான ஆஸ்கர் பிஸ்டோரியஸ், 2013–ம் ஆண்டு காதலர் தினத்தன்று தனது காதலி ரீவா ஸ்டீன்கம்ப்பை சுட்டுக் கொன்றார். வீட்டில் திருடன் புகுந்துவிட்டதாக நினைத்து தவறுதலாக சுட்டதாக பிஸ்டோரியஸ் கூறினார். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் பிஸ்டோரியசை கைது செய்து வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கில் மரணம் விளைவிக்கும் குற்றம் செய்ததாக அவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஒருவருடமாக சிறையில் இருந்த அவர் பரோலில் வெளியே வந்து தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை குறைக்கக் கோரி தென் ஆப்பிரிக்க சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இது திட்டமிட்ட கொலை என்று கூறியதுடன், இதுபற்றி விசாரித்து பிஸ்டோரியசுக்கு தண்டனையை உயர்த்தி வழங்கும்படி கீழ்கோர்ட்டுக்கு உத்தரவிட்டனர். இதையடுத்து அரசியல் சாசன அமர்வில் முறையிட அவரது வழக்கறிஞர்கள் முயன்றனர். ஆனால், வழக்கை விசாரிக்க அரசியல் சாசன அமர்வு மறுத்துவிட்டது.
இதையடுத்து கீழ்கோர்ட்டில் பிஸ்டோரியசுக்கு வழங்கப்படும் தண்டனை தொடர்பான வாதம் ஜூன் 13-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை நடைபெறும் என்று நீதிபதி அறிவித்தார். அதன்படி, இன்று வாதம் தொடங்கியது.
அப்போது அவரது தரப்பு சாட்சியான உளவியல் நிபுணர் ஜோனாதன் கூறுகையில், சம்பவம் நடந்த பின்னர் பிஸ்டோரியசின் மனநிலை பாதிக்கப்பட்டதாகவும், அது கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமடைந்தது கடுமையான மன அழுத்த்தில் இருப்பதாகவும் கூறினார். தொடர்ந்து வாதம் நடைபெற்று வருகிறது.
இந்த வழக்கில் பிஸ்டோரியசுக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என தெரிகிறது.
Average Rating