தத்து கொடுத்த குழந்தையை மீண்டும் கேட்கும் தாய் – சோகத்தில் தவிக்கும் தம்பதி..!!
சுவிஸ் நாட்டை சேர்ந்த தம்பதிக்கு தாயார் ஒருவர் தனது குழந்தையை தத்து கொடுத்த பிறகு தற்போது மீண்டும் குழந்தையை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸ் நாட்டை சேர்ந்த டேனியல் மற்றும் ஈஸ்தர் என்ற தம்பதி மத்திய அமெரிக்காவில் உள்ள Nicaragua என்ற நாட்டில் பணிபுரிந்து வருகிறார்கள்.
இதே நாட்டை சேர்ந்த மைனர் பெண் ஒருவருக்கு 9 மாதங்களுக்கு முன்னர் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால், 2 மாத குழந்தையை வளர்க்க போதிய வசதி இல்லாததால், அதனை சுவிஸ் தம்பதிக்கு தத்து கொடுத்துள்ளனர்.
தற்போது சுவிஸ் தம்பதி குழந்தையை 9 மாதங்களாக வளர்த்து வந்துள்ளனர்.
இந்நிலையில், தத்து கொடுத்த குழந்தையை தன்னிடம் திருப்பி கொடுக்க வேண்டும் என தாயார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்த வழக்கு தொடர்பில் ‘குழந்தையை தாயாரிடம் ஒப்படைக்க வேண்டும்’ என நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது.
ஆனால், இந்த தீர்ப்பை எதிர்த்து சுவிஸ் தம்பதி மேல் முறையீடு செய்யவுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தம்பதி பேசியபோது, ‘குழந்தையை தன்னுடைய சம்மதத்தின் பேரில் தத்து கொடுக்கவில்லை’ என தாயார் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இது ஏன் அவருக்கு 9 மாதங்களாக தெரியவில்லை? 9 மாதங்களாக நாங்கள் எங்கள் பிள்ளை போல் வளர்த்து வந்துள்ளோம். இப்போது குழந்தையை எங்களிடமிருந்து பிரிக்க முயற்சி செய்கிறார்கள்.
தத்து கொடுத்துவிட்டு மீண்டும் திருப்பி பெற்றுக்கொள்ள குழந்தை ஒன்றும் வியாபார பொருள் இல்லை. குழந்தையின் நலனிற்காக நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்வோம்’ என உருக்கமாக பேசியுள்ளனர்.
தற்போது குழந்தைகள் நல மையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அந்த குழந்தை பராமரிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating