பாலக்காடு அருகே ஆஸ்பத்திரிக்குள் நுழைந்து தாய்- மகனுக்கு அரிவாள் வெட்டு: நோயாளிகள் அலறியடித்து ஓட்டம்…!!
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் வித்யானந்தன்சேரியை சேர்ந்தவர் வனஜா (வயது 45). இவரது மகன் மிதுன் (20). தாயும், மகனும் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர்.
நேற்று மாலை அதே பகுதியை சேர்ந்த தேவசி (28) என்பவர் ஆஸ்பத்திரிக்குள் அரிவாளுடன் நுழைந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த வனஜா மற்றும் அவரது மகனை அரிவாளால் வெட்டினார். இதில் இருவருக்கும் தலை மற்றும் உடலில் பலத்த வெட்டுகாயம் ஏற்பட்டது.
தேவசியை ஆஸ்பத்திரி டாக்டர் அருண் தடுக்க முயன்றார். ஆனால் டாக்டரையும் அவர் தாக்க முயன்றதாக தெரிகிறது. இதைப்பார்த்து அங்கு சிகிச்சை பெற்று வந்த மற்ற நோயாளிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பொதுமக்கள் வருவதை பார்த்த தேவசி அங்கிருந்து தப்பினார். பின்னர் இது குறித்து டாக்டர் அருண் நெம்மாறை போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
இன்ஸ்பெக்டர் பினு தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். அங்கு பலத்த காயத்துடன் உயிருக்கு போராடிய வனஜாவையும், மிதுனையும் மீட்டு திருச்சூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக கொலை முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது. தப்பி ஓடிய தேவசியை போலீசார் தேடி வருகிறார்கள்.
Average Rating