லெபனான் கை ஓங்குகிறது: ஏவுகணை வீச்சில் 15 இஸ்ரேல் வீரர்கள் பலி
லெபனான் மீது இஸ்ரேல் விமானங்கள் கடந்த 26 நாட்களாக குண்டு வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. லெபனானின் எல்லைப் பகுதி கிராமங்களுக்குள் இஸ்ரேல் பீரங்கி படையும் குண்டுமழை பொழிந்து வருகிறது. தலைநகர் பெய்ரூட் உள்பட பல நகரங்கள் பற்றி எரிகின்றன. ஏராளமான கிராமங்கள் நிர்மூலமாகி மயான பூமியாக காட்சி அளிக்கிறது. இஸ்ரேலின் இந்த தாக்குதலில் 400 குழந்தைகள் உள்பட 900 அப்பாவி பொதுமக்கள் பலியாகிவிட்டனர்.
இஸ்ரேலின் இந்த தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினரும் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. இப்போது ஹிஸ்புல்லா இயக்கத்தினர் தங்கள் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இஸ்ரேலின் முக்கிய நகரங்களையும் முன்னேறி வரும் இஸ்ரேல் தரைப்படையினரையும் ஹிஸ்புல்லா வீரர்கள் குறி வைத்து ஏவுகணைகளை வீசி வருகிறார்கள். நேற்று நடந்த ஒரே நாள் தாக்குதலில் 15 இஸ்ரேல் வீரர்கள் பலியானார்கள்.
26 நாட்களாக நடந்த போரில் இதுவரை இஸ்ரேலின் கையே ஓங்கி இருந்தது. இப்போது ஒரு திடீர் திருப்பமாக லெபனானின் கை ஓங்குகிறது. எல்லை பகுதிகளில் இஸ்ரேல் பீரங்கி படையினர் மேலும் முன்னேறி வராமல் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கடுமையாக எதிர்தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்த தாக்குதலில் லெபனானின் 12 வீரர்கள் பலியானார்கள்.
லெபனான் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலின் ஹைபா நகரில் பல கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இது இஸ்ரேலின் 3-வது பெரிய நகரம். கிலாபுர கிர்யத் உள்பட மேலும் பல இஸ்ரேல் நகரங்கள் லெபனானின் ஏவுகணை தாக்குதலால் தகர்க்கப்பட்டன.