எங்களை ஒதுக்குவது சரியில்லை”: கரீனாவின் ஆதங்கம்..!!
இந்தி நடிகை கரீனா கபூருக்கும் சயீப் அலிகானுக்கும் 2012-ல் திருமணம் நடந்தது. கரீனா கபூர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனால் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்து விட்டதாகவும் குழந்தை பெற்ற பின் சினிமாவை விட்டு விலகி விடுவார் என்றும் தகவல்கள் பரவி உள்ளன. இதற்கு கரீனா கபூர் பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது:-
“நான் சினிமாவுக்கு வந்து 15 வருடங்கள் ஆகி விட்டன. இப்போதும் நிறைய படங்கள் கைவசம் வைத்து ஓய்வில்லாமல் நடித்துக்கொண்டு இருக்கிறேன். கதாநாயகிகளுக்கு திருமணம் ஆனதும் இனிமேல் நடிக்க மாட்டார். மார்க்கெட் போய் விட்டது என்றெல்லாம் கதை கட்டி விடுகிறார்கள். கதாநாயகர்களுக்கும் திருமணம் நடக்கத்தான் செய்கிறது. அவர்களை பற்றி எதுவும் சொல்வது இல்லை. திருமணம் ஆன நடிகைகளாலும் நடிக்க முடியும்.
அலுவலகங்களில் வேலை பார்க்கும் பெண்கள் கர்ப்பிணியானதும் சிறிது ஓய்வு எடுத்து குழந்தை பெற்றுக்கொள்கிறார்கள். பிரசவத்துக்கு பிறகு அவர்கள் வேலையை ராஜினாமா செய்வது இல்லை. மீண்டும் அலுவலகம் செல்கிறார்கள். அதுபோல்தான் நடிகைகளும். நான் தற்போது கர்ப்பமாக இருக்கிறேன். இப்போதும் நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன். தொழில் வேறு சொந்த வாழ்க்கை வேறு. நான் தாயான பிறகும் சினிமாவில் நீடிப்பேன். நடிப்பதை ஒருபோதும் விடமாட்டேன்.
பிரசவத்துக்கு பிறகு நடிப்பதற்காக இப்போதே கதைகள் கேட்டுக்கொண்டு இருக்கிறேன். சில இயக்குனர்கள் திருமணமான நடிகைகளை ஒதுக்குகிறார்கள் அதில் நியாயம் இல்லை. திருமணம் மற்றும் பிரசவத்துக்கு பிறகும் கதாநாயகிகளால் சிறப்பாக நடிக்க முடியும் அவர்களை ஒதுக்கக்கூடாது.”
இவ்வாறு கரீனா கபூர் கூறினார்.
Average Rating