மனைவியை தாக்கி மயக்கமடைய செய்து மகன், மகளை கொன்று மதபோதகர் தற்கொலை..!!
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் பிரவம் பகுதியை சேர்ந்தவர் ரெஜி (வயது 40). இவர் இடுக்கி மாவட்டத்தில் உள்ள ஒரு கிறிஸ்தவ சபையில் போதகராக இருந்தார். இவரது மனைவி சந்தியா (36). இவர்களது மகன் அபினவ் ரெஜி (15). மகள் ஆல்பியா ரெஜி.
இந்நிலையில் நேற்று போதகர் ரெஜிக்கும் அவரது மனைவி சந்தியாவுக்கும் இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த போதகர் மனைவியை தாக்கினார். இதில் சந்தியா மயக்கம் அடைந்தார்.
சிறிது நேரத்துக்கு பின்னர் மயக்கம் தெளிந்து பார்த்தபோது கணவர் வரவேற்பு அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்தார். அதிர்ச்சியடைந்த சந்தியா அலறி சத்தம் போட்டார்.
பின்னர் குழந்தைகள் அறைக்கு சென்று பார்த்த போது மகன் அபினவ் ரெஜி, மகள் ஆல்பியா ரெஜி ஆகியோரும் தூக்கில் பிணமாக தொங்கினார்.
2 பிள்ளைகளை கொன்று கணவர் தற்கொலை செய்து கொண்டதை அறிந்த சந்தியா கூக்குரலிட்டு கதறினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர்.
இது குறித்து பிரவம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இறந்த 3 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
முதற்கட்ட விசாரணையில் குடும்பத் தகராறு காரணமாக மதபோதகர் தனது 2 குழந்தைகளை கொன்று தற்கொலை செய்து கொண்டார் என்று போலீசார் கூறினார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
Average Rating