விஷம் கலந்த உணவை சாப்பிட்டதால் பள்ளி வகுப்பறையில் மயங்கி விழுந்த மாணவி உயிரிழப்பு…!!
திருத்தணி அருகே உள்ள அகூர் மணி நகரைச் சேர்ந்தவர் சுந்தரம். விவசாயி. இவரது மகள் கீதா (வயது 13). அதே பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். கூலித்தொழிலாளி. இவரது மகள் மீனா (12). இவர்களில் கீதா 8-ம் வகுப்பும், மீனா 7-ம் வகுப்பும் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். நேற்று அவர்கள் இருவரும் பள்ளிக்கு சென்றனர்.
அப்போது அவர்கள் இருவரும் அவர்களது வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்தனர். இதைத்தொடர்ந்து அவர்கள் இருவரையும் சிகிச்சைக்காக திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர்.
அங்கு அவர்கள் இருவருக்கும் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கப்பட்டது. அப்போது அவர்கள் இருவரும் சாப்பிட்டிருந்த உணவில் பூச்சிக்கொல்லி மருந்து (விஷம்) கலந்திருப்பது தெரிய வந்தது.
அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இருந்ததால் அவர்கள் இருவரையும் உடனடியாக மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் கீதா பரிதாபமாக இறந்துபோனார்.
தற்போது மீனாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரும் தற்கொலைக்காக தாங்களாகவே விஷம் சாப்பிட்டார்களா அல்லது அவர்களது உணவில் விஷம் கலந்தது எப்படி என்பது குறித்து விசாரித்து வருகிறார்கள்.
Average Rating