லெபனானில் போர் நிறுத்தம் கோரி ஐ.நா.வில் ஒருமனதாக தீர்மானம்
இஸ்ரேல், லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் இடையேயான சண்டையை நிறுத்தக்கோரி ஐநா சபை பாதுகாப்பு கவுன்சிலில் ஒருமனதாக தீர்மானம் சனிக்கிழமை நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் தொடர்பாக கடந்த 3 வாரமாக ஆலோசனை நடந்தது. இந்த தீர்மானத்தை அமெரிக்காவும் பிரான்ஸýம் உருவாக்கின.
லெபனானின் தெற்குப்பகுதி, ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ஆதிக்கம் உள்ள பகுதியாக கருதப்படுகிறது. அந்த பகுதியில் 15 ஆயிரம் அமைதிப்படை வீரர்களை நிறுத்தவும் இந்த தீர்மானம் அனுமதி தருகிறது. தீர்மானத்தின்படி லெபனானில் உள்ள ஐநா இடைக்காலப்படையின் எண்ணிக்கை 2000-த்திலிருந்து 15 ஆயிரமாக உயர்த்தப்படும்.
இத் தீர்மானம் நிறைவேறி உள்ள போதிலும் இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையேயான சண்டை உடனடியாக முடிவுக்கு வருமா என்பது கேள்விக்குறியே. இந்த தீர்மானத்தை இஸ்ரேல் அமைச்சரவை ஞாயிற்றுக்கிழமை பரிசீலிக்க உள்ளது. மேலும் தீர்மானத்தில் உள்ள நிபந்தனைகளை ஹிஸ்புல்லா ஏற்குமா என்பதும் தெரியவில்லை.
இந்நிலையில் இந்த தீர்மானத்தை ஏற்பதாக அமெரிக்க அதிபரிடம் தெரியப்படுத்தி உள்ளார் இஸ்ரேல் பிரதமர். லெபனானும், தீர்மானத்தை ஏற்பதாக ஓரிரு தினங்களில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சண்டை மூண்டபிறகு தெற்கு லெபனானில் தாம் ஆக்கிரமித்துள்ள இடங்களை விட்டு இஸ்ரேல் படைகள் உடனடியாக விலகும்படி இந்த தீர்மானம் வற்புறுத்தவில்லை. மாறாக, ஹிஸ்புல்லா தீவிரவாதிகள் ஆதிக்கம் மிக்க பகுதிகள், லெபனான் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததும் இஸ்ரேல் படைகள் வெளியேற வேண்டும் என்று தீர்மானம் கூறுகிறது.
ஆனால், இஸ்ரேல் படைகள் உடனடியாக வெளியேறவேண்டும் என்பதே ஹிஸ்புல்லா தீவிரவாதிகளின் முக்கிய கோரிக்கை. லெபனான் மண்ணில் ஒரு இஸ்ரேல் வீரர் இருந்தாலும் சண்டை தொடரும் என்று தீவிரவாதிகள் கூறி வருகின்றனர்.
இதனிடையே, போர் நிறுத்தத்தை அமல்படுத்துவதற்கான தேதியை முடிவு செய்ய இஸ்ரேல், லெபனான் அதிகாரிகளை சந்திக்க ஐநா பொதுச்செயலர் கோஃபி அன்னான் திட்டமிட்டுள்ளார். இந்த தீர்மானம் எதிர்பார்த்த பலன் தருவதாக இருந்தால் மற்றொரு தீர்மானம் வர வாய்ப்பில்லை.
லெபனானில் உள்ள யாருக்கும் அரசு அனுமதியின்றி, ஆயுதங்களை விற்கவோ வழங்கவோ இந்த தீர்மானம் தடை விதிக்கிறது. ஈரான், சிரியா மூலமாக ஹிஸ்புல்லா தீவிரவாதிகளுக்கு ஆயுதங்கள் கிடைப்பதை தடுப்பதே இதன் நோக்கம்.