விக்கிரவாண்டி அருகே 3 சிறுவர்கள் குளத்தில் மூழ்கி பலி…!!
விக்கிரவாண்டி அருகேயுள்ள கப்பியாம்புலியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகவேல். இவரது மகன்கள் அமர்நாத் (வயது 7), ஜெயகிருஷ்ணன் (5). அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் பிரவீன் (8).
இவர்கள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்தனர். நேற்று ஆயுதபூஜை என்பதால் சிறுவர்கள் 3 பேரும் தாங்கள் ஓட்டும் சைக்கிளை கழுவி சுத்தம் செய்வதற்காக அங்குள்ள தாமரை குளத்துக்கு கொண்டு சென்றனர். சைக்கிளை கழுவிய பின்னர் 3 பேரும் குளத்தில் இறங்கி குளித்தனர்.
அப்போது எதிர் பாராதவிதமாக குளத்தின் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டனர். தண்ணீரில் மூழ்கிய அவர்கள் காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என அலறினர். அங்கு நின்று கொண்டிருந்தவர்கள் சிறுவர்களை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள் 3 சிறுவர்களும் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
தகவல் அறிந்ததும் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு நரேந்திரன் நாயர், விக்கிரவாண்டி தாசில்தார் அருங்குளவன், இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் ஆகியோர் விரைந்து சென்று சிறுவர்களின் பெற்றோர்களிடமும், உறவினர்களிடமும் விசாரித்தனர்.
குளத்தில் மூழ்கி இறந்த குழந்தைகளின் பெற்றோர்களுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம், கலெக்டர் சுப்பிரமணியன், லட்சுமணன் எம்.பி. ஆகியோர் ஆறுதல் கூறினர்.
Average Rating