லெபனானில் இருந்து இஸ்ரேல் ராணுவம் வாபஸ் ஆனது: கைப்பற்றிய நகரங்களை ஒப்படைத்தது
2 இஸ்ரேல் ராணுவ வீரர்களை லெபனானின் ஹிஸ்புல்லா இயக்கத்தினர் கடத்தி சென்றதை தொடர்ந்து லெபனான் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. கடந்த மாதம் 12-ந்தேதி இந்த தாக்குதல் நடைபெற்றது. லெபனானின் தலைநகர் இஸ்ரேல் விமானங்களின் குண்டு மழையில் பற்றி எரிந்தன. தெற்கு பகுதியில் இஸ்ரேலின் பீரேங்கிப்படை ஊடுருவி பல நகரங்களை தரைமட்டமாக்கியது. இஸ்ரேலின் தாக்குதலில் 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பலியாகிவிட்டனர். ஹிஸ்புல்லா இயக்கத்தினர் நடத்திய ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேல் தரப்பில் 100 பேர் பலியானார்கள்.
இந்த போரை முடிவுக்கு கொண்டு வர ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் மேற்கொண்ட முயற்சியை தொடர்ந்து இரு நாடுகளும் போர் நிறுத்தம் செய்ய ஒப்புக் கொண்டது.
அதன்படி இன்று காலை முதல் போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது. இந்திய நேரடிப்படி காலை 10.30 மணிக்கு போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது. லெபனானுக்குள் ஊடுருவிய ராணுவத்தை வாபஸ் பெறவும் தாக்குதலை நிறுத்திக் கொள்ளவும், இஸ்ரேல் பிரதமர் ஆல்மர்ட் உத்தரவிட்டார். அதன்படி லெபனானுக்குள் ஊடுருவிய இஸ்ரேல் ராணுவத்தினர் திரும்பத் தொடங்கினார்கள்.
ஒரு சில இஸ்ரேல் ராணுவத்தினர் மட்டும் லெபனானின் தெற்கு பகுதியில் தொடர்ந்து தங்கி இருப்பார்கள். கைப்பற்றிய நகரங்களை சர்வதேச படையினரிடம் ஒப்படைத்த பிறகு திரும்பி விடுவார்கள்.
போர் நிறுத்தம் அமுலுக்கு வருவதற்கு முன் கடைசி நிமிடம் வரை இஸ்ரேல் படைகள் நேற்று இரவு முதல் விடிய விடிய தாக்குதல் நடத்தியது. நேற்று இரவு இஸ்ரேலுக்குள் வெடிகுண்டுகளை ஏற்றிக் கொண்டு தாக்குதல் நடத்த வந்த 2 லெபனான் விமானங்களை இஸ்ரேல் வீரர்கள் சுட்டு வீழ்த்தினார்கள்.
கடந்த 33 நாட்களாக நடந்த இஸ்ரேல்-லெபனான் போர் தற்காலிகமாக ஓய்ந்துள்ளது.