மற்ற ஹீரோக்களைப் போல் சிம்பு என்னை டார்ச்சர் செய்யவில்லை: கவுதம் மேனன்…!!
கவுதம் மேனன் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’ படத்திற்கு பிறகு சிம்புவுடன் இணைந்து ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தில் இணைந்துள்ளார். இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்துள்ளார். நீண்டநாள் தயாரிப்பில் இருந்த இப்படம் ஒருவழியாக வருகிற 11-ந் தேதி வெளிவரவிருக்கிறது.
இந்நிலையில், இன்று இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடந்தது. அப்போது பேசிய இயக்குனர் கவுதம்மேனன். மற்ற ஹீரோக்களை போல் சிம்பு இந்த படத்தில் என்னை ரொம்பவும் டார்ச்சர் செய்யவில்லை. மற்ற ஹீரோக்களிடம் கதை சொல்லச் சென்றால், முழுக் கதையையும் சொல்ல வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால், இந்த படத்தின் ஒன்லைனை மட்டுமே கேட்டுக் கொண்டு சிம்பு இதில் நடிக்க ஒப்புக் கொண்டார் என்று கூறினார்.
மேலும் அவர் பேசும்போது, இந்த படம் ரிலீசாவதற்கு ஏன் இவ்வளவு நாட்கள் ஆனது என்ற கேள்வி அனைவருக்கும் இருக்கிறது. ஆனால், இதற்கு என்னிடம் பதில் இல்லை. இப்படத்தை 60 நாட்களில் எடுத்து முடித்துவிட்டோம். இருப்பினும், ஏன் இவ்வளவு காலதாமதம் ஆனது என்பது எனக்கே தெரியவில்லை. இவ்வளவு காலதாமதத்தோடு வெளிவந்தாலும், இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள எதிர்பார்ப்பு குறையவே இல்லை என்பதை பார்க்கும்போது ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது என்றார்.
மேலும், இப்படத்தின் போஸ்டர்களில் தயாரிப்பாளர்கள் பெயர்கள் இல்லையே என்று பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு கவுதம் மேனன் பதில் கூறும்போது, இப்போதெல்லாம் போஸ்டர்களில் தயாரிப்பாளர்கள் பெயரை பார்த்துவிட்டு, தனக்கு பாக்கி கொடுக்க வேண்டும் என்று போர்க்கொடி தூக்கிக் கொண்டு வழக்கு போடுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது. எனவேதான் என்னுடைய படத்தின் போஸ்டரில் எந்த தயாரிப்பாளரின் பெயரையும் போடவில்லை என்று கூறினார்.
Average Rating