யாழ். பகுதியில் கடும் சண்டை: 98 புலிகள் பலி
யாழ்ப்பாணம் பகுதியில் இலங்கை ராணுவத்துடன் கடும் சண்டையை விடுதலைப் புலிகள் வியாழக்கிழமை தொடங்கினர். இத்தாக்குதலில் புலிகள் தரப்பில் 98 பேர் கொல்லப்பட்டனர் என்று ராணுவ செய்தி தொடர்பாளர் தெரிவித்தார். யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள கிலாலி ராணுவ முகாம் மீது வியாழக்கிழமை அதிகாலை புலிகள் கடற்படையின் “கரும் புலி’ படையினர் இந்த தாக்குதலை தொடுத்தனர்.
இதில் 9 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருக்கலாம் என்றும், 60-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும் உறுதி செய்யப்படாத தகவல்கள் வெளியாகி உள்ளன.
போர் நிறுத்த கண்காணிப்பாளர்கள் வெளியேறினர்:திரிகோணமலையில் அடிப்படை நிலைமை மாறாததால் அங்கு போர் நிறுத்தத்தைக் கண்காணிக்கும் குழுவினர் 6 பேர் திரிகோணமலை மாவட்டத்திலிருந்து சாலை மார்க்கமாக கொழும்புக்கு வியாழக்கிழமை புறப்பட்டனர். துறைமுக சாலையில் உள்ள தமது அலுவலகத்தையும் அவர்கள் மூடிவிட்டனர். இந்த தகவலை இலங்கை கண்காணிப்புக்குழு வட்டாரங்கள் தெரிவித்தன.
ஊரடங்கு தளர்வு: இதனிடையே, ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள யாழ்ப்பாணம் பகுதி வடமராச்சி, வாலிகாமம் ஆகிய பகுதிகளில் வியாழக்கிழமை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை ஊரடங்கு உத்தரவு தளர்ப்பட்டது. எனினும், யாழ்ப்பாணத்தில் உள்ள சிறுதீவுகளில் ஊரடங்கு தளர்த்தப்படவில்லை. கடந்த வெள்ளக்கிழமை முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது.
மருத்துவ சிகிச்சைக்கு மறுப்பு: யாழ்ப்பாணத்தில் தென்மராச்சி, மற்றும் சில தீவுகளில் காயம் அடைந்தவர்களை சிகிச்சைக்காக அழைத்துச் செல்ல அரசு ஏஜென்ட் மேற்கொண்ட முயற்சியை இலங்கை ராணுவம் தடுத்ததாக யாழ்ப்பாண செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.
நாகர்கோவில், முகமலை, கிலாலி, கச்சாய், கொடிகாமம் உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்கு செல்ல முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர். சில இடங்களில் ஊரடங்கு உத்தரவு அமல் காரணமாகவும் சிகிச்சைக்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.