ஓசூர் அருகே விபத்து: அரசு பஸ் டிரைவர்- கண்டக்டர் பலி…!!
சென்னையில் இருந்து கர்நாடக அரசு சொகுசு பஸ் ஒன்று பெங்களூருக்கு நேற்று இரவு சென்னையில் இருந்து 30 பயணிகளை ஏற்றிக் கொண்டு கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை நோக்கி சென்று கொண்டிருந்தது.
இந்த பஸ்சை கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம் தத்தனூர் கிராமத்தை சேர்ந்த டிரைவர் பைரேகவுடு (வயது 42) என்பவர் ஓட்டினார்.
அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன்(40) என்பவர் கண்டக்டராக பணியில் இருந்தார்.
இன்று அதிகாலை 5 மணி அளவில் ஓசூர் அருகே பத்தளப்பள்ளி என்ற இடத்தில் சென்றபோது பஸ் திடீரென பழுதானது.
உடனடியாக சாலையோரம் பஸ்சை நிறுத்தி விட்டு, அதில் இருந்த பயணிகளை கீழே இறக்கி விட்டு விட்டு, டிரைவர் பைரேகவுடு மற்றும் கண்டக்டர் சீனிவாசன் ஆகிய இருவரும் அந்த வழியாக சென்ற மாற்று பஸ்களை நிறுத்தி அதில் பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்தனர்.
இதையடுத்து டிரைவரும், கண்டக்டரும் பஸ்சின் பின்புறம் உள்ள என்ஜினீனை பழுது பார்த்துக் கொண்டிருந்தனர்.
அப்போது, ஓசூரை நோக்கி வேகமாக வந்த டெம்போ வேன் பஸ்சின் பின்புறம் பழுது பார்த்து கொண்டிருந்த டிரைவர் பைரேகவுடு, கண்டக்டர் சீனிவாசன் ஆகிய இருவர் மீதும் பயங்கரமாக மோதியது. இதில் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார்கள்.
விபத்தை ஏற்படுத்திய டெம்போ வேனின் டிரைவர் டெம்போவை அங்கு நிறுத்தி விட்டு கீழே இறங்கி தப்பி ஓடி விட்டார்.
இந்த கோர விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஓசூர் அட்கோ போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரசு பஸ் டிரைவர் பைரேகவுடு உடலையும், கண்டக்டர் சீனிவாசன் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்கள்.
மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்தி விட்டு தலைமறைவாகி உள்ள டெம்போ வேன் டிரைவரை போலீசார் வலைவீசி தீவிரமாக தேடி வருகிறார்கள்.
விபத்து நடந்தது பற்றியும், பலியான அரசு பஸ் டிரைவர் பற்றியும் கண்டக்டர் பற்றியும் கர்நாடக அரசு போக்குரவத்து கழகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
விபத்து பற்றி கேள்விப்பட்டதும் பலியானவர்களுடைய குடும்பத்தினரும், உறவினர்களும் ஓசூர் அரசு மருத்துவமனைக்கு வந்துள்ளனர். அவர்கள் உடலை பார்த்து கதறி அழுதார்கள்.
இந்த கோர விபத்து சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Average Rating