மாற்றுத் தலைமை உருவாகிறதா?..!! (கட்டுரை)

Read Time:15 Minute, 18 Second

article_1488092922-205தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் அண்மைய நாட்களாகப் பூசல்கள் தீவிரமடைந்துள்ள ஒரு கட்டத்தில், இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர் தமிழர் தரப்பின் ஒற்றுமையை வலியுறுத்திச் சென்றிருக்கிறார்.

2015 நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகித்துக் கொண்டிருக்கும், ஈபிஆர்எல்எவ், கட்சிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கும் இடையில் கடுமையான நிழல் போர் நீடித்து வந்தது. தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்தில், சுரேஸ் பிரேமச்சந்திரனும் ஒரு தரப்பாக இணைந்து கொண்டதையடுத்து, இந்த நிழல் போர் மேலும் தீவிரமடைந்தது.

தமிழ் மக்கள் பேரவையின் உருவாக்கத்துக்குப் பின்னர், அவ்வப்போது இந்த நிழல் போர் தீவிரமடைவதும் தணிவதுமாகத் தொடர்ந்த நிலையில், அண்மைய சில வாரங்களாக இது உச்சநிலையை எட்டியிருக்கிறது.
அத்துடன் இந்த நிழல் போரை, இப்போது கூட்டமைப்புக்கு வெளியே உள்ள தரப்புகளும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியிருக்கின்றன.

மட்டக்களப்பில் நடந்த எழுக தமிழ் நிகழ்வில், விக்னேஸ்வரன் தலைமையில் தமிழ் மக்களுக்கு மாற்றுத் தலைமை உருவாக்கப்பட வேண்டும் என்று சுரேஸ் பிரேமச்சந்திரன் கருத்து வெளியிட்டிருந்தார்.
அதனையடுத்து, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கூட்டமைப்பை விட்டு ஈ.பி.ஆர்.எல்.எவ் வெளியே வரவேண்டும் என்ற அழைப்பை விடுத்திருந்தார்.

அதற்குப் பின்னர், கூட்டமைப்புத் தலைவர் இரா.சம்பந்தன் தொடர்ந்து இதேபோக்கில் செயற்பட்டால், கூட்டமைப்பை விட்டு வெளியேறும் நிலை ஏற்படும் என்று அவர் நாசூக்காக கூறியிருந்தார்.
அதாவது, தாம் கூட்டமைப்பில் இருந்து வெளியேறுவோம் என்றும் கூறாமல் தமிழ் அரசுக் கட்சியை வெளியேற்றுவோம் என்றும் கூறாமல் ஒரு மயக்கமான கருத்தை வெளிப்படுத்தியிருந்தார்.
நான்கு கட்சிகள் அங்கம் வகிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ் மாத்திரம் கடுமையான எதிர்ப்பை வெளியிடுகிறது. தமிழ் மக்கள் பேரவையில் அங்கம் வகிக்கும் புளொட், பெரும்பாலும் மதில் மேல் பூனையாகவே இருக்கிறது.

புளொட்டும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் இணைந்து கொண்டால்க் கூடக் கூட்டமைப்பில் இருந்து தமிழ் அரசுக் கட்சியை வெளியேற்ற முடியாது. ஏனென்றால், ரெலோவின் ஆதரவும் அதற்குத் தேவை. ரெலோ இன்னமும் தமிழ் அரசுக் கட்சிக்கு சார்பான நிலையிலேயே இருந்து வருகிறது.

அதைவிட, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவப் பதிவுகள் யாவும், தமிழ் அரசுக் கட்சியின் கட்டுப்பாட்டிலேயே இருக்கின்றன. இந்த நிலையில் தமிழ் அரசுக் கட்சியை வெளியேற்றி விட்டு, அதனை ஈ.பி.ஆர்.எல்.எவ் உள்ளிட்ட கட்சிகளால் தமது கட்டுப்பாட்டில் கொண்டு வர முடியாது.
அவ்வாறான நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு வெளியேறுவதே ஒரே வழியாக இருக்கும். ஆனால், ஈ.பி.ஆர்.எல்.எவ் அதற்கு தயாராக இருக்கிறதா என்பது முக்கியமான கேள்வி.

அதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை விட்டு ஈ.பி.ஆர்.எல்.எவ் கட்சியை வெளியேற்றுவதில், வெளித்தரப்புகளின் தலையீடுகள் அதிகம் காணப்படுகின்றன. அடுத்தடுத்து யாழ்ப்பாணத்தில் நடத்தியுள்ள செய்தியாளர் சந்திப்புகளில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இதனைத் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பலவீனப்படுத்தி விட்டு, தமிழ் மக்கள் பேரவை என்ற தளத்தை வைத்துக் கொண்டு மாற்றுத் தலைமை ஒன்றை உருவாக்கும் முயற்சிகளின் ஒரு கட்டமாகவே இதனைக் கருத வேண்டும்.
தமிழ் மக்கள் பேரவை ஓர் அரசியல் கட்சி அல்ல; அரசியல் கட்சியாகவும் செயற்படாது என்ற உத்தரவாதம் பகிரங்கமாக அளிக்கப்பட்டுள்ள சூழலில், அதனை அத்தகைய மாற்று அரசியல் தலைமையாக உருவாக்க முடியாது.

ஆனால், அதில் அங்கம் வகிக்கும் தரப்புகள், பேரவைக்குப் புறம்பாக ஒரு மாற்று அரசியல் தலைமையை உருவாக்கும் முயற்சிகளை முன்னெடுப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அதுபற்றிச் சில நாட்களுக்கு முன்னர் ஒரு செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டிருக்கிறார்.

விக்னேஸ்வரனை மாற்றுத் தலைமையாக உருவாக்கும் முயற்சிகளே இப்போது நடந்தாலும், அதற்கு அவர் இணங்காத பட்சத்தில், வேறொரு தளத்தை உருவாக்கவும் அவர்கள் முயற்சிக்கலாம்.

இந்தநிலையில் தான், தற்போதைய அரசியல் சூழலை இந்தத் தரப்புகள் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, கூட்டமைப்பை ஏமாற்றிய அல்லது ஏமாற்றப்பட்ட தலைமையாகப் பிரசாரப்படுத்துவதில் முனைப்புக் காட்டப்படுகிறது.

சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் உள்ளிட்டவர்கள் தொடர்ச்சியாக சம்பந்தன் மீதும், கூட்டமைப்பு மீதும் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

2016இல் அரசியல் தீர்வு என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை; காணிகள் விடுவிப்பு, போர்க்குற்ற விசாரணை, அரசியல் கைதிகள் விடுதலை, காணாமற்போனோர் விவகாரம் என்று எல்லாவற்றிலும் கூட்டமைப்பின் முடிவுகள் தவறாகப் போய் விட்டதாக இவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

ஒட்டுமொத்தத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் நடவடிக்கைகள் தமிழ் மக்களைப் படுகுழியில் தள்ளிச் சென்றிருக்கிறது. திட்டமிட்டே கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றி விட்டது என்பது போன்ற கருத்தை இவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோரிக்கைகளை அரசாங்கம் சரியான முறையில் கையாளவில்லை என்பது தெரிந்த விடயமே. இந்த விடயத்தில் கூட்டமைப்பின் அழுத்தங்கள் போதாமையாக இருந்திருக்கவும் வாய்ப்புகள் உள்ளது.
அரசாங்கத்துக்கு நெருக்கடியைக் கொடுக்காமல், அரசியல் தீர்வை அடையலாம் என்ற சம்பந்தனின் இராஜதந்திரத்துக்கு இந்த இடத்தில் தான் சறுக்கல் நிகழ்ந்திருக்கிறது.

சம்பந்தனின் நெகிழ்வை அரசாங்கம் பயன்படுத்திக் கொண்டுள்ளதே தவிர, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் விடயத்தில், சரியான அக்கறை காண்பிக்கப்படவில்லை.

இதன் விளைவாக, சம்பந்தனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களிடம் இருந்து அந்நியப்படுத்தப்படுவது போன்ற தோற்றப்பாடு ஏற்பட்டிருக்கிறது; அல்லது ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
வடக்கு, கிழக்கில் நடத்தப்படும் போராட்டக் களங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. சில இடங்களில் சம்பந்தனின் உருவப்படம் எரிக்கப்பட்டு, பாரிய எதிர்ப்பு அவருக்கு உள்ளது போன்ற தோற்றப்பாடு காண்பிக்கப்பட்டுள்ளது.

காணாமல்போனோர் பிரச்சினை குறித்து அலரி மாளிகையில் நடந்த பேச்சுவார்த்தையில் பங்கெடுத்த கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, அவர்கள் அங்கிருந்து வெளியேறும் நிலை ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.

வவுனியாவில் சம்பந்தனின் உருவப் படம் எரிக்கப்பட்டமை; அலரி மாளிகை எதிர்ப்பு என்பன திட்டமிட்டு ஒரு தரப்பினரால் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளாக இருந்தாலும் வெளியே இத்தகைய நிகழ்வுகள் வேறுபட்ட தோற்றப்பாடுகளையே ஏற்படுத்தியிருக்கும்.
இவ்வாறாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமை தமிழ் மக்களால் வெறுக்கப்படும் ஒன்றாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதேவேளை, முன்னர் அரசாங்கத்துடன் முட்டி மோதி வந்த தமிழர் தரப்பு இப்போது, தமக்குள் மோதிக் கொள்ளத் தொடங்கியுள்ளதானது அரசதரப்புக்கு சாதகமாக மாறியிருக்கிறது.
ஏனென்றால் தமிழர்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பு இப்போது பலவீனப்படுத்தப்பட்டிருக்கிறது. தமிழரசுக் கட்சி ஒரு போராட்டத்தை நடத்தினால் மறு தரப்பு அதனைப் பலவீனப்படுத்துகிறது. தமிழ் மக்கள் பேரவையின் போராட்டங்களைத் தமிழரசுக் கட்சி பலவீனப்படுத்துகிறது. இதனால், அரசுக்கு எதிரான தமிழர்களின் திரட்சி என்பது பலவீனப்படுகிறது.

இன்னொரு பக்கத்தில், கூட்டமைப்பு தலைமை மீது இருந்த நம்பிக்கையை தமிழர்கள் இழக்கின்ற நிலைக்கு அரசாங்கம் கொண்டு சென்றிருக்கிறது. இந்த விடயத்தில், கூட்டமைப்பு தலைமையும் சுதாகரித்துக் கொண்டிருக்கத் தவறியிருக்கிறது.

இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தியே கூட்டமைப்பை உடைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இப்போது, தமிழரசுக் கட்சிக்கும் ஈபிஆர்எல்எவ் கட்சிக்கும் இடையில் ஏகவசனத்தில், கருத்துப் பரிமாற்றங்கள் நடக்கின்றன. கிழக்கில் புளொட் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனுக்கும் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் வாய்மோதல்கள் நடக்கின்றன.

இதனை வெளித்தரப்புகள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, கூட்டமைப்பை பலவீனப்படுத்தும் முயற்சிகளில் இறங்கியுள்ளன.

கூட்டமைப்புக்கு மாற்றாக, தமிழ்மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு பலமான அமைப்பை உருவாக்கும் முயற்சிகள் இந்தக் கட்டத்தில் தீவிரப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்த முயற்சிகள் எந்தளவுக்குப் பலிக்கும் என்று கூற முடியாது.

ஏனென்றால், இதனைத் தமிழ் மக்கள் மாத்திரமன்றி, சர்வதேச தரப்புகளும் அங்கிகரிக்க வேண்டும். கடந்த வாரம், கொழும்பு வந்திருந்த இந்திய வெளிவிவகாரச் செயலர் எஸ்.ஜெய்சங்கர், கூட்டமைப்புத் தலைவர்களைச் சந்தித்தபோது, பல்வேறு முக்கிய செய்திகளைக் கூறியிருந்தார்.

அதில் ஒன்று, தமிழர் தரப்புக்குள் ஒற்றுமை முக்கியமானது. பல தரப்புகளாக நின்று மோதிக்கொள்ளாமல், தமிழ் மக்களின் உரிமைகளை ஒரே அணியாக இருந்து போராடி வெல்ல வேண்டும் என்பதே அவர் கூறிய அறிவுரை.
இந்தச் சந்திப்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படுவதை இந்தியா விரும்பவில்லை என்பதை இது எடுத்துக் காட்டுகிறது. இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமைக்கு சாதகமான விடயம்.

ஆனால், மாற்றுத் தலைமை ஒன்றை இந்தியா விரும்பவில்லை என்பதை, கூட்டமைப்புக்கு எதிரான தரப்புகள் வேறுபட்ட கோணத்தில் மக்களிடம் கொண்டு செல்ல முனையலாம்.

அதேவேளை, இந்தியாவின் இத்தகைய நிலைப்பாட்டை மீறி, மாற்றுத் தலைமை ஒன்றை தமிழர் தரப்பினால் உருவாக்க முடியுமா என்பதும் சிந்தனைக்குரிய விடயம் தான்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வடகொரிய அதிபரின் அண்ணனை ஏன் கொலை செய்தேன்: கொலையாளி பெண் பரபரப்பு வாக்குமூலம்..!!
Next post அஜித் படத்துக்காக தயாராகும் சென்னையின் பிரபல திரையரங்கம்..!!