போர்க்கொடி தூக்குவோர் சாதிக்கப் போவது என்ன?..!! (கட்டுரை)

Read Time:16 Minute, 25 Second

article_1488874255-TNA-newஇலங்கையில் தமிழ் இனம், தனது இன விடுதலைக்காக சுமார் எழுபது வருடங்களாக ஒப்பற்ற தியாகங்களைச் செய்து போராடி வருகின்றது. இதற்காகப் பல அரசியல் கட்சிகள், விடுதலை அமைப்புக்கள் தோற்றம் பெற்றன. விடுதலைப் புலிகளின் நேரடியான பங்குபற்றல் மற்றும் ஒப்புதலுடன் 2001 ஒக்டோபர் 20 ஆம் திகதி பிரசவித்ததே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகும். இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி (இ.த.அ.க), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ( EPRLF) தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (TELO)அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் (ACTC)என நான்கு கட்சிகள் ஒன்றிணைந்து தோற்றம் பெற்றதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

அந்த வகையில், 2001 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் 15 ஆசனங்களையும் 2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் 22 ஆசனங்களையும் 2010 ஆம் ஆண்டில் 14 இடங்களையும் 2015 ஆம் ஆண்டு தேர்தலில் 16 இடங்களையும் கைப்பற்றியது. அமோக வெற்றி வாகை சூடியது. 2010 ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸ் விலகிக் கொண்டது. தமிழீழ மக்கள் விடுதலை இயக்கம் (PLOTE) இணைந்து கொண்டது.

தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (த.தே. கூ) பல சவால்களுக்கு முகம் கொடுத்து நிற்கின்றது. த .தே. கூ உடையப் போகின்றதா? த. தே கூட்டமைப்புக்குள் பிளவு என்றெல்லாம் நாளாந்தம் பத்திரிகைச் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. த. தே. கூ உருவாக்கம் பெற்ற நாள் முதலே அரசியல் கட்சியாக அதன் பதிவு, சின்னம் எனப் பிரச்சினைகள் ஏற்பட்டாலும், அவைகள் தீர்க்கப்படாமலே கிடப்பில் போடப்பட்டு விட்டன. தேர்தல் வேளையில் கட்சி ரீதியான ஆசன பங்கீட்டிலும் தமிழரசுக் கட்சி செல்வாக்கு செலுத்துகின்றது; தனது கட்சி அங்கத்தவர்களை அதிகப் படியாக நியமிக்கின்றது என்ற கருத்துகளும் குற்றச்சாட்டுகளும் வருவதுண்டு.

உண்மையில், நான்கு கட்சிகள் ஒரு குடையின் கீழ் வந்து ஒன்றினைந்தாலும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் ஆதிக்கமே கூட்டமைப்பு உருவாக்கிய அன்று தொட்டு இன்று வரை, நிலவுவதால் பிரச்சினைகளும் பிடுங்குப்பாடுகளும் பஞ்சமில்லாமல் நிலவுகின்றன. த.தே.கூ என்பது வெறுமனே ஓர் அரசியல் செய்யும் கட்சி அல்ல; மாறாக வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களால், தமிழ் தேசியத்தால் ஆணை வழங்கப்பட்ட அமைப்பு. ஆயுதப் போராட்டம் மௌனித்த பின்னர், தமிழ் மக்கள் சுதந்திரமாக வாழுவதற்கான தமது உரிமைகளைப் பெற்றுத் தரும் பொறுப்பு தமிழ் மக்களால் தமிழ்க் கூட்டமைப்பிடம் வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே, இத்தகைய பெரும் பொறுப்பு வாய்ந்த அமைப்பிடம் ‘நீ பெரிதா, நான் பெரிதா’ என்ற பொறாமைக்குணம் சற்றேனும் எழக் கூடாது. தற்போதைய நிலையில் தமிழ் மக்களுக்கு நிலையான நிம்மதி, நிலையான தீர்வு வேண்டும். மேலும், “2016 ஆம் ஆண்டுக்குள் அரசியல் தீர்வு எட்டப்படும் என இரா. சம்பந்தன் கூறி வந்தார். ஆகவே, அது வரை நாம் பொறுமை காத்தோம். அது நடைபெறவில்லை. ஆதலால் சம்பந்தனும் ஏமாந்து, தமிழ் மக்களையும் ஏமாற்றி விட்டார்; ஏமாற்றி விட்டார்கள்” எனச் சுரேஸ் பிரேமசந்திரன் கூறி வருகிறார். எனவே, இவ்விடத்தில் சம்பந்தன், எந்தத் தகவல் அல்லது தரவு அடிப்படையில் இவ்விதம் கூறினார்? 70 வருட இனப் பிணக்கை, ஒரு வருடத்துக்குள் தீர்க்கப்பட்டுவிடும் என எழுந்தமானமாகக் கூற முடியுமா? போன்ற வினாக்கள் எழுவது நிச்சயமே.

அதுவும் இலங்கை சிங்கள ஆட்சியாளர்கள் பற்றி நன்கு அறிந்திருந்தும் இவ்வாறான உறுதியற்ற வாக்குறுதிகளை வழங்கலாமா? ஆகவே, 2015 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் வேளையில், தமிழ் மக்களது வாக்குகளை வேட்டையாடவே இவ்வாறு கூறியதாக ஏன் இப்போது தமிழ் மக்கள் கருதக் கூடாது. வடக்கு, கிழக்கு இணைப்பு, தமிழரின் இறைமை, சுயநிர்னயம், சமஸ்டி என எல்லா கோசங்களும் தேர்தல் மேடையில் முழங்கியது. அது தற்போதும் உயிர்ப்புடன் தமிழர் இதயங்களில் உள்ள வேளை அரசியல் தலைவர்கள் அது தொடர்பாக என்ன நிலைப்பாட்டில் உள்ளனர் என தெளிவுபடுத்த வேண்டும்.

ஏனெனில், 20.02.2017 இல் கொழும்பில் த.தே.கூ முக்கியஸ்தர்களை, இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெயசங்கர் சந்தித்திருந்தார். அப் பேச்சுவார்த்தையின் நடுவே ஒரு கட்டத்தில் உங்கள் எதிர்பார்ப்பு தொடர்பில் முன்னுரிமை வரிசை என்ன? என கேட்கப்பட்டுள்ளது. அவ்வேளையில் அனைவரும் ஒருமித்து வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பில் குரல் கொடுக்கவில்லை. ஆகவே, அங்கு முன் ஆயத்தம் இன்றி, தங்களுக்குள் கலந்துரையாடல் இன்றி, கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் பங்குபற்றியமை தெரிகின்றது.

அடுத்து, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, த.தே. கூட்டமைப்பை உடைக்க முற்படுகின்றார் என வடக்கு, கிழக்கு சார்ந்த கூட்டமைப்பு அரசியல்வாதிகளே கருத்துக்களைக் கூறி வருகின்றனர். ‘ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம்’ என்பார்கள். அந்த நிலை கூட்டமைப்புக்கு ஏற்பட்டால், அதன் எதிரிகளுக்குத்தான் கொண்டாட்டம். எப்போதுமே தமிழ் மக்கள் மத்தியில் ஒற்றுமை ஏற்படுவதை பேரினவாத அரசாங்கம் ஏற்றுக் கொள்ளாது; சகிக்காது என்பது எமது பட்டறிவு.

ஆகவே, சிறுகருத்து வேறுபாடுகளுக்கும் இடமின்றி விவேகமாகவும் வினைத்திறன் மிக்க விளைச்சலை தரக்கூடிய அரசியலை செய்ய வேண்டிய பாரிய பொறுப்பு உள்ளது என தமிழர் அரசியல் ஆற்றுவோர் அறிந்திருக்க வேண்டும். அகிம்சை ரீதியிலும் ஆயுத ரீதியிலும் விடுதலைக்காக போராடிய வேளை, தமிழ் மக்களுக்குள் தோற்றுவிக்கப்பட்ட பிளவுகள், அந்தப் போராட்டங்களை வெற்றியை நோக்கி நகர்த்தவிடாமல் பின்னாவேயே பிடித்து இழுத்து விழுத்தி விட்டன. அதுபோன்ற நிலை மீண்டும் ஏற்படாதவாறு நம்மவர்கள் நடந்து கொள்ள வேண்டும். அடுத்து, முல்லைத்தீவு கேப்பாபுலவு மக்கள் தமது வாழ்விடங்களைப் படையினரின் பிடியிலிருந்து விடுவிக்குமாறு கோரி நடத்திய போராட்டங்கள் ஓரளவு வெற்றி பெற்றுள்ளன.

சிறுவர், பெண்கள், முதியோர் என அனைவரும் பனி, வெய்யில், மழை என எதனையும் பொருட்படுத்தாமல், ஒற்றுமையுடன் போராடி, குறிப்பிடத்தக்க வெற்றியை அடைந்துள்ளார்கள். நோயால் பீடிக்கப்பட்டு வைத்தியசாலையில் தங்கி இருந்து சிகிச்சை பெறும் நண்பர் அல்லது உறவினரைச் சென்று நலம் விசாரிப்பது போல அமைப்புகளும் அரசியல்வாதிகளும் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபடும் மக்களின் சுகநலம் விசாரிப்பதற்குச் சென்றுவருகிறார்கள். அவ்வாறு செல்பவர்கள் வெறுங்கையுடன் செல்லாது சில உணவுப் பொருடகள், உணவுப் பொதிகள் மற்றும் சில பொருட்களை வழங்குகின்றனர்.

சில மணித்துளிகள் அவர்களுடன் உரையாடுகின்றனர்; போராடும் மக்களுடன் நின்று புகைப்படங்களை எடுத்து பத்திரிகைகளிலும் சமூகவலைத்தளங்களிலும் பிரசாரப்படுத்துகின்றனர். மீண்டும் தங்கள் சொகுசு வாகனங்களில் வீடு திரும்புகின்றனர். அங்கு போராட்டத்தில் பங்குபற்றும் மக்கள் கூட இவ்வாறாகத் தங்களுடன் வந்து வீணாக நேரத்தை விரையமாக்காது ஆக்கபூர்வமாக ஏதாவது செய்யுமாறுதான் கோரி நிற்கின்றனர். அடுத்து, தமிழ் மக்கள் பேரவை (த .ம. பே) ஒரு மக்கள் அமைப்பே அன்றி ஓர் அரசியல் கட்சி இல்லை.

அத்துடன் அதற்கான ஏற்பாடுகளும் இல்லை என அதிலுள்ள கட்சி சாரா முக்கியஸ்தர்கள் அவ்வப்போது கூறி வருகின்றனர். ஆனால், கஜேந்திரகுமாரின் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் சுரேஸ் பிரேமச்சந்திரனின் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி ஆகியோர் த. ம. பேரவையை கட்சி என்பது போலவே கருதி தமது கருத்துக்களைக் கூறி வருவது போல காட்சி அளிக்கின்றது. மேலும், மட்டக்களப்பு ‘எழுக தமிழ்’ தொடர்பில் கருத்து தெரிவிக்கையில், தமது கட்சியின் பங்களிப்பே அதில் உயர்வாக இருந்ததாகவும் தமது கட்சிச் செயலாளர் கஜேந்திரன் இரு மாதங்களுக்கு முன்பே கிழக்குக்குச் சென்று மக்களை விழிப்பூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் கூறியமை ஆரோக்கிய கருத்துப் பகர்வாகத் தெரியவில்லை.

எழுக தமிழில் தமது கட்சியை முன்னிலைப் படுத்துவது மக்கள் முன்னணிக்கு முக்கிய தேவையா என தோன்றுகின்றது. கடந்த பொதுத் தேர்தலில் தமது கட்சி கிளிநொச்சி மாவட்டத்தையும் உள்ளடக்கிய யாழ், தேர்தல் தொகுதியில் ஆகக் குறைந்தது இரு (02) ஆசனங்களை கைப்பற்றும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணி நம்பி இருந்தது. ஏன் தமது தேர்தல் பரப்புரைகளில் கூறி வந்தது. ஆனால், நடந்ததோ ஐக்கிய தேசிய கட்சி, ஈ.பி.டி.பி ஆகிய கட்சிகளுக்கு அடுத்த படியாக வெறும் 15000 வாக்குகளைப் பெற்று ஆசனம் எதனையும் தனதாக்கவில்லை. இவர்களால் கூட்டமைப்பின் வாக்குகளும் சிதறின.

ஆகவே கூட்டிக்கழித்து பார்க்கும் போது அடுத்த தேர்தல் வெற்றியை நோக்கி இவர்கள் காய் நகர்த்துகின்றார்களா? என எண்ண தோன்றுகின்றது. மேலும், 2015 ஜனவரியில் ஆட்சிக்கு வந்த நல்லாட்சி? தமிழ் மக்களுக்கு உருப்படியாக குறிப்பிட்டு சொல்லும்படியாக ஒன்றும் செய்யவில்லை. இந்நிலையில் அதனையிட்டுத் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை மாற்ற வேண்டும், புதிய தலைமை வரவேண்டும் என கஜேந்திரகுமார், சுரேஸ் பிரேமச்சந்திரன் இவர்களுடன் ஆனந்தசங்கரியும் சேர்ந்து எதிர்ப்புக் கோசமிடுவது, ‘நித்திரை வரவில்லை என்பதற்காக தலையனையை மாற்றும் வேலை’யாகும். தமிழர் தலைமை மாறினால் அல்லது மாற்றப்பட்டால் பேரினவாத அரசாங்கம் யாவற்றையும் தருமா? கள நிலவரம் மாறுமா? வட்டுக்கோட்டை தீர்மானத்தை (1977) மேற்கொண்ட வேளை பிழையான தலைவர்களால் எடுத்த சரியான தீர்மானம் என கூறப்பட்டது.

ஆகவே தற்போதைய முக்கிய கட்டத்தில் கூட்டமைப்பை உடைப்பது உடைக்க எத்தனிப்பது சரியான தலைவர்களால் எடுத்த சரியான முடிவா? பிழையான தலைவர்களால் எடுத்த பிழையான முடிவா? ஏனெனில், சுரேஸ் பிரேமச்சந்திரன் தாங்கள் கூட்டமைப்பிலிருந்து வெளியேறுவது தொடர்பில் சரியான நேரத்தில் சரியான முடிவு எடுப்பதாகவும் அதனால் கூட்டமைப்பை சின்னாபின்னமாக்கிய பொறுப்பு சம்பந்தனை சாரும் எனவும் காட்டமான கருத்தாடலை வெளிப்படுத்தியுள்ளார்.

மேலும் கஜேந்திரகுமார் தேசியம் தாயகம் சுயநிர்னயம் ஆகியவற்றை ஏற்றுக் கொண்டால் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி மற்றும் புளொட் என்பன தம்முடன் இணையலாம் என்றும் சுரேஸ் அவர்கள் இரு தோணியில் கால் வைத்துக் கொண்டு நிற்க முடியாது எனவும் தெரிவித்துள்ளமையானது என்ன விதத்திலாவது கூட்டமைப்பை குலைக்க வேண்டும் என எண்ணுவது போல உள்ளது. ஆகவே, மீண்டும் தமிழர் நலன் என்ற தலைப்பின் கீழ் அனைவரும் அவரவர் தனிப்பட்ட ‘ஈகோ’ களைந்து ஒன்றுபட வேண்டும். ‘அடம்பன் கொடியும் திரண்டால் தான் மிடுக்கு’.

அதுவே வடக்கு, கிழக்கு மக்களது பேரவா; அதுவே நிரந்தர, நீடித்த அரசியல் தீர இவ்விடத்தில் சராசரி தமிழ் பொது மகன் இவ்வாறாக எண்ணுகின்றான். ஆதாவது, ஓயாத யுத்தத்தால் முற்றாக முடமான வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் ஓர் அண்ணளவாக பத்துப் பேரைத் தலைவர்களாகக் கொண்ட தமிழ் தலைவர்கள், ஒரு புள்ளியில் ஒன்றுபட முடியாது என்றால் எவ்வாறு முஸ்லிம் மக்களையும் இணைத்துக் கொண்டு கடும் போக்கு சிங்கள ஆட்சியாரையும் அரவணைத்துத் தமிழ் மக்களது இனப் பிரச்சினைகளுக்கு தீர்வை தரப்போகின்றனர்?

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post போலீஸ் காவலில் பாகிஸ்தானை சேர்ந்த திருநங்கையர் படுகொலை?..!!
Next post உலக சாதனை படைத்த வைக்கம் விஜயலட்சுமி…!! (வீடியோ)