தமிழக அரசியல்வாதிகள் சுயரூபத்தை மீண்டும் வெளிப்படுத்திவிட்டனராம்.. சொல்வது ராஜபக்சேவின் மகன் நாமல்..!!
இலங்கை தமிழர்களுக்கு உதவ தமிழக அரசியல்வாதிகள் யாரையும் அனுமதிக்க மாட்டார்கள் என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டதால் அவர்களின் உண்மையான முகம் வெளிப்பட்டுள்ளதாக அந்நாட்டின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே தெரிவித்துள்ளார். புலம்பெயர்ந்த 150 தமிழர்களுக்கு இலவச வீடுகள் வழங்கும் விழா லைக்கா சுபாஷ்கரனின் ஞானம் அறக்கட்டளை சார்பில் வவுனியாவில் நடைபெற உள்ளது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இலங்கை மீதான தமிழர்களின் கோபத்தை தணிக்கவே ரஜினிகாந்த்தை பகடைக்காயாக பயன்படுத்துவதாலும், அவர்களின் அழைப்புக்கு பின்னணியில் அரசியல் உள்ளதாலும் இந்த பயணத்தை ரஜினிகாந்த் ரத்து செய்ய வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மதிமுக தலைவர் வைகோ, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் தி.வேல்முருகன் ஆகியோர் கேட்டுக் கொண்டனர்.
இவர்களது கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ரஜினிகாந்த், அரசியல் கட்சித் தலைவர்களின் காரணங்களை தன்னால் முழுவதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்றும் எனினும் அவர்களின் கோரிக்கைகளை ஏற்று தாம் இலங்கைக்கு செல்ல போவதில்லை என்றும் நேற்று அறிக்கை மூலம் தெரிவித்தார். இதுகுறித்து இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன் நாமல் ராஜபக்சே டிவிட்டரில் தெரிவிக்கையில், தமிழக அரசியல்வாதிகளின் உண்மையான முகம் வெ்ளிவந்துள்ளது.
இலங்கை தமிழர்களுக்கு உதவ யார் முன்வந்தாலும் அதை தடுத்து நிறுத்துவர் என்பதை மீண்டும் நிரூபித்து காட்டி விட்டனர். அரசியல் லாபத்துக்காக இலங்கை தமிழர்களின் பெயர்களை பயன்படுத்துவார்களே தவிர அவர்களுக்கென்று தமிழக அரசியல்வாதிகள் எதையும் செய்ததில்லை. இலங்கை தமிழர்களுக்கு உதவ முன்வந்த நடிகர் ரஜினிகாந்தை தடுத்து நிறுத்திவிட்டனர் என்று நாமல் ராஜபக்சே குறிப்பிட்டுள்ளார்.
Average Rating