ஒரிசாவில் சுமார் 500 கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றன!
ஒரிசா மாநிலத்தில் கட்டாக், பௌத், பூரி, நயாகரா உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள 500 கிராமங்கள் கடுமையான வெள்ளத்தில் சிக்கித் தவிக்கின்றன! மண்டலி முனையில் அபாயகரத்திற்கும் அதிகமான தண்ணீர் இருப்பதால் மகாநதியில் அதிக அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது விநாடிக்கு 13 லட்சம் கன அடி நீர் மகாநதியில் திறந்துவிடப்பட்டு வருகிறது.
இதனால் நதிக் கரையோரம் உள்ள 10 மாவட்டங்களில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. வீட்டின் முதல் தளம் வரை வெள்ள நீர் நிறைந்துள்ளது. இதனால் சுமார் 2 லட்சம் மக்கள் வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.
வெள்ள நீர் அதிகரித்திருப்பதால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் தேக்கம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக ராணுவம் வரவழைக்கப்பட்டு, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
பாலைவன மாநிலமான ராஜஸ்தானின் பார்மர் நதியோரப் பகுதிகளிலும் தற்போது வெள்ளம் அதிகரித்துள்ளது. இதனால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
ராஜஸ்தானில் மழை மற்றும் வெள்ளச் சம்பவங்களில் சிக்கி இதுவரை 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். பலரைக் காணவில்லை.