மருத்துவர்களால் இறந்ததாக அறிவிக்கப்பட்ட நோயாளி: உயிர் பிழைக்க வைத்த பொலிசார்..!!
பிரான்ஸ் நாட்டில் மாரடைப்பால் இறந்ததாக மருத்துவர்களால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பெண் ஒருவரை பொலிசார் மீண்டும் உயிர் பிழைக்க வைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் தான் இந்த பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சில தினங்களுக்கு முன்னர் இதே நகரை சேர்ந்த 49 வயதான தாயார் ஒருவர் தனது 18 வயதான மகளுடன் சேர்ந்து வெளியே ஷொப்பிங் சென்றுள்ளார்.
சில மணி நேரங்களுக்கு பின்னர் வீடு திரும்பியபோது தாயாருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார்.
இக்காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்த மகள் உடனடியாக மருத்துவர்களுக்கு தகவல் அளித்துள்ளார்.
தகவலை பெற்ற மருத்துவர்கள் உடனடியாக அங்கு வந்து தாயாரை பரிசோதனை செய்துள்ளனர்.
பின்னர், ‘மாரடைப்பால் உங்கள் தாயார் இறந்து விட்டார். பொலிசாரை வரவழைத்து மேற்கொண்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள்’ என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
மருத்துவர்களின் வார்த்தைகளை கேட்டு மகள் அலறி அழுதுள்ளார். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு இச்சம்பவம் தொடர்பாக அறிக்கை தயார் செய்ய இரண்டு பொலிசார் அங்கு வந்துள்ளனர்.
அப்போது, இருவரில் ஒருவர் மூடப்பட்டிருந்த ஆடையை நீக்கி உயிரிழந்ததாக கூறப்பட்ட பெண்ணை பார்த்துள்ளார்.
பெண்ணின் வயிற்றுப்பகுதியில் அசைவுகள் ஏற்படுவதை கண்டு பொலிசார் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
அதாவது, தாயார் மூச்சை இழுத்து விடும்போது வயிறு மேலும் கீழும் அசைந்துள்ளது.
இக்காட்சியை கண்டு மகிழ்ச்சி அடைந்த பொலிசார் உடனடியாக அவரே முதலுதவி சிகிச்சை அளித்துள்ளார்.
பின்னர், மீண்டும் மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
சில தினங்களுக்கு பின்னர் குணமடைந்த தாயார் மகளுடன் மகிழ்ச்சியாக வீடு திரும்பியுள்ளார்.
இச்சம்பவம் குறித்து பேசிய உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் ‘பெண்ணின் உயிரை சரியான நேரத்தில் காப்பாற்றிய இரண்டு பொலிஸ் அதிகாரிகளுக்கு விருது வழங்கி கெளரப்படுத்த உள்ளதாக’ தெரிவித்துள்ளார்.
Average Rating