நாட்டறம்பள்ளி அருகே கார் கவிழ்ந்து நடிகை பலி: 3 பேர் படுகாயம்..!!
பெங்களூருவை சேர்ந்தவர் பால்ராஜ். இவருடைய மகள் ரேகா சிந்து (வயது 22). பெங்களூருரில் டி.வி. துணை நடிகையாக நடித்து வந்தார். டி.வி. நடிகர், நடிகைகளுக்கு ஆடை வடிவமைப்பாளராகவும், விளம்பர மாடலாகவும் இருந்தார்.
தற்போது தமிழில் ‘ருத்ரா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். படம் இன்னும் வெளியாகவில்லை. இவர், சென்னையில் சூட்டிங்கிற்கு சென்று விட்டு நேற்றிரவு காரில் பெங்களூருவுக்கு புறப்பட்டார். நடிகை ரேகா சிந்துவுடன், பெங்களூருவை சேர்ந்த அவரது தோழி ரட்சினி (21) மற்றும் ஜெயக்குமரன் (20) ஆகிய 2 பேரும் பயணித்தனர்.
காரை, டிரைவர் அபிஷேக் குமரன் (22) என்பவர் ஓட்டினார். இன்று அதிகாலை 1 மணியளவில் வேலூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி சுண்ணாம்பு குட்டை என்ற பகுதியை கடந்து சென்னை- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் கார் அதிவேகமாக சென்றுக் கொண்டிருந்தது.
அப்போது டிரைவருக்கு தூக்க கலக்கம் ஏற்பட்டது. இதனால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார், சாலையில் தாறுமாறாக ஓடியது. சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் கார் மோதி கவிழ்ந்தது. இதில் காரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கி சேதமடைந்தது.
இடிபாடுகளுக்குள் சிக்கியதில் ரேகா சிந்து பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். டிரைவர் அபிஷேக் குமரன் உள்பட மற்ற 3 பேரும் பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
படுகாயமடைந்த 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் பலியான ரேகா சிந்துவின் உடலையும் மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் டி.வி. நடிகை பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
Average Rating