இலங்கை தமிழ் எம்.பிக்கள் வைகோவுடன் சந்திப்பு
இலங்கையிலிருந்து வந்துள்ள ஐந்து தமிழ் எம்.பிக்கள் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை சந்தித்துப் பேசினர். இலங்கையிலிருந்து ஐந்து பேர் கொண்ட தமிழ் எம்.பிக்கள் குழு சென்னை வந்துள்ளது. இந்தக் குழுவில் ஆர்.சம்பந்தன், எம்.கே.சிவாஜி லிங்கம், மாவை சேனாதிராஜா, பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
இந்தக் குழுவினர் மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை அவரது கட்சித் தலைமையகத்தில் சந்தித்து சுமார் 2 மணி நேரம் பேசினர். இந்த சந்திப்புக்குப் பின்னர் வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு. பிரதமர் உள்ளிட்ட தலைவர்களை சந்திக்க தமிழ் எம்.பிக்கள் வந்துள்ளனர். பிரதமர் வெளிநாடு போகிறார். எனவே அவர் வந்தவுடன் அவரை சந்திக்க திட்டமிட்டுள்ளனர்.
இலங்கைக்கான இந்திய தூதர் நிரூபமா ராவ் மீது இலங்கை அமைச்சர் அனுரா பண்டாரநாõயகே தேவையில்லாமல் புகார் கூறியுள்ளார் நிரூபமா ராவ் தனது அதிகாரத்திற்குட்பட்டு செயல்பட்டு வருகிறார். அவர் மீதான புகார் அவசியமற்றது என்றார் வைகோ.
பின்னர் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பந்தன் பேசுகையில், சொந்த விஷயமாக தமிழகம் வந்துள்ளோம். தமிழக தலைவர்களை சந்திக்கத் திட்டமிட்டுள்ளோம். பிரதமர் வெளிநாடு போவதாக கூறியுள்ளனர். எனவே விரைவில் அவரை சந்திப்போம்.
இலங்கை தமிழ் மக்களுக்கு ஏற்புடைய வகையில் இந்திய முடிவெடுக்கும் என நம்புகிறோம் என்றார் அவர். முதல்வர் கருணாநிதியையும் நேற்று ஜந்திக்க அவர்கள் திட்டமிட்டிருந்தனர். ஆனால் முதல்வருக்கு வேறு அலுவலகள் இருந்ததால் அவரை சந்திக்க முடியவில்லை.