செவ்வாய் கிரகத்தில் பனிக்கட்டியா? உப்பா?: புதிய படத்தால் பரபரப்பு
செவ்வாய் கிரகத்தில் இருந்து `பீனிக்ஸ்’ விண்கலம் அனுப்பிய படத்தில் வெள்ளையாக ஒரு பொருள் தோன்றுவதால் அது பனிக்கட்டியா? அல்லது உப்பா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருப்பதாகவும் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலை நிலவுவதாகவும் நீண்ட காலமாக நம்பப்பட்டு வருகிறது. எனவே செவ்வாய் கிரகம் குறித்து ஆராய்ச்சி செய்வதற்காக `பீனிக்ஸ்’ என்ற விண்கலத்தை அமெரிக்க விஞ்ஞானிகள் அனுப்பி உள்ளனர். கடந்த மாதம் அது செவ்வாய் கிரகத்தை அடைந்தது. அந்த விண்கலத்தில் உள்ள நீண்ட கைகளைக் கொண்ட ரோபாட், செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பை தோண்டி எடுத்து ஆராய்ச்சி செய்து வருகிறது. துருவப்பகுதியில்தான் பனிக்கட்டி அல்லது தண்ணீர் இருக்கும் வாய்ப்பு இருப்பதால் அங்குதான் `பீனிக்ஸ்’ விண்கலம் மண்ணை தோண்டி எடுத்தது. ஏற்கனவே இரண்டு இடங்களில் மண் எடுக்கப்பட்டது. தற்போது, மேலும் ஒரு இடத்தில் `பீனிக்ஸ்’ விண்கலத்தின் ரோபாட் தோண்டியது. சுமார் ஒரு அடி 3 அங்குலம் ஆழத்துக்கு மண்ணை எடுத்தபோது சிவப்பு புழுதிக்கு கீழே வெள்ளை நிறத்தில் ஒரு பொருள் காணப்படுகிறது. அதை `பீனிக்ஸ்` விண்கலம் படம் எடுத்து அனுப்பி இருக்கிறது. எனவே அது உறைநிலையில் உள்ள பனிக்கட்டியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது குறித்து `பீனிக்ஸ்` விண்கல ஆராய்ச்சி திட்ட விஞ்ஞானி ராய் ஆர்விட்சன் கூறுகையில், `செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில் காணப்படுவது பனி கட்டியாகத்தான் இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம். எனினும் அதை உறுதியாக எங்களால் தற்போது கூற முடியாது’ என்றார்
1800 டிகிரி
ஒருவேளை அது பனிக்கட்டியாக இல்லாத பட்சத்தில் உப்பாக இருக்கலாம் என்று தெரிகிறது. முதற்கட்ட பரிசோதனையின்போது தண்ணீர் அல்லது பனிக்கட்டி தொடர்பாக எந்த தகவலும் கிடைக்கவில்லை. தற்போது வெள்ளை நிறத்தில் ஒரு பொருள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டு இருப்பதால் தீவிர சோதனை நடத்த விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
அந்த பொருளை 1800 டிகிரி அளவுக்கு சூடுபடுத்த திட்டமிட்டுள்ளனர். இந்த வார இறுதியில், இந்த சோதனை நடைபெற உள்ளது. அதன் பிறகே அது என்ன பொருள் என்பது தெரியவரும். செவ்வாய் கிரகத்தின் துருவ பகுதியில் மனிதர்கள் வாழ முடியுமா என்பதை ஆராய்வதுதான் `பீனிக்ஸ்` விண்கலத்தின் முக்கிய குறிக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது.
Average Rating