பாகிஸ்தானில் இருந்து இன்று 147 இந்திய மீனவர்கள் விடுதலை..!!
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக பாகிஸ்தான் மற்றும் இந்திய மீனவர்கள் பரஸ்பரம் இருநாட்டு கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுகின்றனர். பாகிஸ்தான் கடற்படையிடம் சிக்குபவர்கள் கராச்சி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சிறைகளில் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
அவ்வகையில், கடந்த ஒருமாத காலத்தில் மட்டும் 114 இந்திய மீனவர்களை பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினர் கைது செய்துள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டில் மட்டும் பாகிஸ்தான் கடலோரக் காவல் படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை சுமார் 400 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டிருந்த ஒரு அறிவிப்பில் பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி நுழைந்து மீன் பிடித்ததற்காக கைதான சுமார் 300 இந்திய மீனவர்கள் வரும் ஜனவரி 8-ம் தேதிக்குள் விடுதலை செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி, கடந்த 28-12-2017 அன்று 145 இந்திய மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். அங்குள்ள சிறைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ள மேலும் 146 இந்திய மீனவர்கள் விரைவில் விடுவிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, கராச்சியில் உள்ள மலிர் சிறையில் இருந்தவர்களில் மேலும் 147 இந்திய மீனவர்கள் இன்று விடுதலை ஆனார்கள். அவர்கள் கராச்சி நகரில் இருந்து லாகூருக்கு ரெயில் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.
லாகூரில் இருந்து வாகா எல்லைப்பகுதிக்கு அழைத்து செல்லப்படும் அவர்கள் அங்குள்ள இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுகின்றனர். அவர்களின் பயண கட்டணம் உள்ளிட்ட செலவுகளை பாகிஸ்தானில் உள்ள ஈதி என்ற தொண்டு நிறுவனம் ஏற்றுள்ளது.
கடந்த மாதமும், இன்றும் இருகட்டங்களாக விடுவிக்கப்பட்ட 292 பேரை தவிர கராச்சியில் உள்ள மலிர் சிறையில் மட்டும் மேலும் 262 மீனவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
Average Rating