பாலியல் தொல்லைபற்றி நடிகைகள் பேச மறுப்பது ஏன்? ராதிகா ஆப்தே பதில்!!
கபாலி, ஆல் இன் ஆல் அழகுராஜா உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் ராதிகா ஆப்தே. தற்போது இந்தி படங்களில் நடித்து வருகிறார். அக்ஷய்குமாருடன் அவர் நடித்திருக்கும் ‘பேட்மேன்’ இந்தி பட புரமோஷனில் பங்கேற்று பேசினார். அப்போது நடிகைகளுக்கான பாலியல் தொல்லை குறித்து குறிப்பிட்டார். ராதிகா ஆப்தே கூறியதாவது: பாலியல் தொல்லைபற்றி சில நடிகைகள் வெளிப்படையாக பேசினாலும் பலர் அதுபற்றி வெளிப்படையாக பேசுவதில்லை. அதற்கு காரணம் என்ன என்று கேட்கிறார்கள்.
அப்படி வெளிப்படையாக பேசினால் தங்களின் எதிர்காலம் நாசமாகிவிடும். தங்களுடைய திரையுலக கனவு, கனவாகவே முடிந்துவிடும் என்ற பயம்தான். இதனால்தான் நடிகைகள் யாரும் பாலியல் தொல்லை குறித்து வாய் திறப்பது இல்லை. என்னைப் பொறுத்தவரை பாலியல் தொல்லைக்கு எதிராக பேசவேண்டும் என்றுதான் சொல்வேன். அப்படி பேசினால் மட்டும் போதாது. அதற்கான வற்புறுத்தல் வரும்போது முடியாது என்று சொல்லும் துணிச்சலும் வேண்டும்.
இல்லாவிட்டால் அதுபோன்ற தொந்தரவுகளை நிறுத்த முடியாது. இந்த மாற்றம் உடனே நடக்குமா என்றால் நிச்சயம் நடந்துவிடாது. மாற்றம் வரவேண்டும் என்றால் முதலில் தைரியம் வரவேண்டும். எனக்கு மோசமான பாலியல் தொந்தரவு அனுபவம் எதுவும் இல்லை. அப்படி ஏற்பட்ட சில அனுபவங்களை ஏற்கனவே வெளிப்படையாக பேசி இருக்கிறேன். நான் எதையும் மறைப்பதில்லை. அதேசமயம் மற்றவர்களின் பாலியல் தொல்லை விவகாரம் குறித்து பேசவும் மாட்டேன் இவ்வாறு ராதிகா ஆப்தே தெரிவித்தார்.
Average Rating