திருவனந்தபுரத்தில் வீட்டு ஜன்னல்களில் ஒட்டப்படும் கருப்பு ஸ்டிக்கர் : குழந்தை கடத்தும் கும்பல் கைவரிசையா?
திருவனந்தபுரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வீடுகளின் ஜன்னல்களில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டுள்ளது பீதியை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரத்தில் பாலராமபுரம், நெடுமங்காடு, கருவாமூடு, கள்ளம்பலம், புதுக்குளங்கரை உள்பட பல்வேறு பகுதிகளில், வீடுகளின் ஜன்னல்களில் கடந்த சில தினங்களாக கருப்பு ஸ்டிக்கர்கள் காணப்படுகின்றன. இந்த நிலையில் குழந்தைகளை கடத்தி பிச்சை எடுக்க வைக்கும் கும்பல்தான், குழந்தைகள் இருக்கும் வீடுகளை கண்டறிந்து அந்த வீடுகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டுவதாக தகவல் பரவின. வாட்ஸ் அப், பேஸ்புக் உள்பட சமூக இணையதளங்களில் இந்த தகவல் பரவியது. இதனால் பொதுமக்கள் மத்தியில் கடும் பீதி ஏற்பட்டது.
நாளுக்கு நாள் ஒட்டப்படும் ஸ்டிக்கர்களின் எண்ணிக்கை கூடியதால் மக்களிடையே பீதி மேலும் அதிகரித்தது. இதுதொடர்பாக பல்வேறு காவல் நிலையங்களில் ஏராளமான புகார்கள் குவிந்தன. போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணையில் இறங்கினர்.இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரம் நாலாஞ்சிரா பகுதியில் சந்தேகத்தின் பேரில் ஒரு ஆசாமியை பிடித்தனர். விசாரணையில் அவர் ஆந்திராவை சேர்ந்தவர் என்பது தெரியவந்தது. அவர் மனநிலை பாதிக்கப்பட்டிருந்ததால் அவரை போலீசார் விடுவித்தனர்.
மக்கள் இடையே பீதி அதிகரித்ததால் பல்வேறு இடங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் உண்மை இருக்க வாய்ப்பில்லை. பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Average Rating