விசா விதிமுறைகளை கண்டித்து பிரிட்டன் வாழ் இந்திய அதிகாரிகள் போராட்டம்!!
பிரிட்டன் அரசின் விசா விதிமுறைகளை கண்டித்து லண்டனில் இந்திய அதிகாரிகள் போராட்டம் நடத்தினர். இந்தியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த டாக்டர்கள், இன்ஜினியர்கள், தகவல் தொழில்நுட்ப துறையினர் மற்றும் ஆசிரியர்கள் ஏராளமானோர் பிரிட்டனில் வேலை செய்து வருகின்றனர். பொது விசாவில் சென்ற வெளிநாட்டினர் பிரிட்டனில் குடியுரிமை பெற அங்கு 5 ஆண்டு சட்டப்பூர்வமாக வசித்திருக்க வேண்டும். இந்நிலையில், ஐடி உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டை சேர்ந்த அதிகாரிகள் குடியுரிமை கேட்டு விண்ணப்பிக்கும் போது அவர்களின் மனுக்களை பிரிட்டன் உள்துறை அமைச்சகம் நிராகரித்து விடுகிறது. இதற்கு அவர்கள் தாக்கல் செய்த வருமானத் துறை ஆவணங்களில் உள்ள சிறுசிறு குறைகளை காரணமாக காட்டுகின்றனர்.
இதை கண்டித்து லண்டன் டவுனிங் தெருவில் இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்த டாக்டர்கள், இன்ஜினியர்கள் மற்றும் ஐடி துறையினர் சுமார் 600 பேர் நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவர்கள் ஐரோப்பிய யூனியன் எல்லைக்கு உட்படாத நாட்டை சேர்ந்தவர்கள். இவர்கள் சமூகவலை தளங்கள் மூலம் தகவல் பரிமாறி இந்த போராட்டத்தை நடத்தினர். இது தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறுகையில், ‘‘உள்துறை அமைச்சகத்தின் இந்த புதிய கட்டுப்பாட்டை கண்டித்து போராட்டம் நடத்தியுள்ளோம். நேர்மையற்ற மற்றும் மனிதாபிமானமற்ற இந்த விதிமுறைகளால் வெளிநாட்டில் இருந்து வந்து பிரிட்டனில் குடியேறியுள்ள பல அதிகாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை எதிர்த்து போராடும் வகையில் 25 ஆயிரம் பவுண்டு பணத்தை நிதியாக சேகரித்துள்ளோம்’’ என்றார்.
Average Rating