தமிழ் பட இயக்குனரின் இந்தி படத்துக்கு எதிர்ப்பு : தீபிகாவை அடுத்து சிக்கலில் கங்கனா!!
தமிழில் அனுஷ்கா நடிப்பில் ‘வானம்’ படத்தை இயக்கியவர் கிரீஷ். இவர் இந்தியில் சுதந்திர போராட்ட வீராங்கனை ஜான்சி ராணி லக்குமிபாய் வரலாற்றை ‘மணிகார்னிகா’ பெயரில் இயக்குகிறார். ஜான்சி ராணியாக கங்கனா ரனாவத் நடிக்கிறார். இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடந்து வருகிறது. இதற்கிடையில் தீபிகா படுகோன் நடித்த ‘பத்மாவத்’ படம் திரைக்கு வந்தது. இதில் ராஜ்புத் இனத்தவர்களை இழிவாக சித்தரிக்கும் வகையில் வரலாறு திரித்து காட்டப்படுவதாக புகார் எழுந்ததுடன், அப்படத்தை வெளியிடக்கூடாது என கர்னி சேனா அமைப்பினர் கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சுப்ரீம் கோர்ட் இந்த விவகாரத்தில் தலையிட்டு படத்தை ரிலீஸ் செய்ய உத்தரவிட்டதையடுத்து படம் திரைக்கு வந்தது.
பத்மாவத் படத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதுபோல் தற்போது கங்கனா நடிக்கும் ஜான்சி ராணி படத்துக்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. சுதந்திரத்துக்காக போராடிய ஜான்சி ராணி வெள்ளைக்கார அதிகாரி ஒருவரை காதலிப்பதுபோல் படத்தில் காட்சிகள் சித்தரிக்கப்படுகிறது, எனவே இப்படத்தை வெளியிடக்கூடாது என சில அமைப்பினர் எதிர்ப்பு குரல் எழுப்பியதுடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் அதுபோன்ற காட்சிகள் எதுவும் படத்தில் இல்லை என பட தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Average Rating