காரில் கஞ்சா கடத்திய இருவருக்கு 10 ஆண்டு சிறை!!
சென்னையை சேர்ந்த இளம்பருதி (26), கொடியரசன் (30) ஆகியோர் கடந்த 16.8.2014ல் சென்னையிலிருந்து மதுரைக்கு 170 கிலோ கஞ்சாவை காரில் கடத்தி சென்றுள்ளனர். இதுகுறித்து, லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர்கள் விரைந்து சென்று, போரூர் சுங்கச்சாவடி அருகே காரை மடக்கி பிடித்தனர். காரை சோதனை செய்ததில் 80 பொட்டலங்களாக 170 கிலோ கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இருவரிடமும் போலீசார் நடத்திய விசாரணையில், கஞ்சா மதுரையை சேர்ந்த ராஜாங்கம் என்பவருக்கு கடத்தி செல்வதாக தெரிவித்துள்ளனர்.
இதை தொடர்ந்து, போலீசார் போதைப்பொருள் கடத்தியதாக வழக்கு பதிவு செய்து ராஜாங்கம், கொடியரசன், இளம்பருதி ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இந்த வழக்கு சென்னையில் உள்ள போதைப் பொருள் குறித்த வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் நீதிபதி அய்யப்பன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அரசு வழக்கறிஞர் குமார் ஆஜராகி வாதிட்டார். அனைத்து தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, இந்த வழக்கில் கஞ்சாவை கடத்தி சென்ற கொடியரசன், இளம்பருதி மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும் 1 லட்சம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மேலும் 3வது குற்றவாளியான ராஜாங்கம் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் அவரை விடுதலை செய்தார்.
Average Rating