அருணாச்சலப்பிரதேசத்தில் ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக மாறிய கிராம மக்கள்!!
அருணாச்சலப்பிரதேசத்தில் உள்ள போம்ஜா என்ற கிராமத்தில் வசிக்கும் அனைத்துக் குடும்பங்களுமே ஒரே நாளில் கோடீஸ்வரர்களாக மாறிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அருணாச்சலப்பிரதேசத்தின் தவாங் மாவட்டத்தில் உள்ளது போம்ஜா என்ற மிகச்சிறிய கிராமம். சுமார் 31 குடும்பங்கள் வசித்து வந்த இந்த கிராமத்தினரிடம் இருந்து 200 ஏக்கர் நிலத்தை இந்திய ராணுவம் 5 ஆண்டுகளுக்கு முன்பு, ராணுவ வீரர்களுக்கு குடியிருப்பு கட்ட கைப்பற்றியுள்ளது.
இந்த 31 குடும்பங்களிடம் இருந்தும் கைப்பற்றப்பட்ட நிலத்துக்கான இழப்பீட்டுத் தொகையை மத்திய பாதுகாப்புத் துறை நேற்று அளித்தது. பாதுகாப்புத் துறையிடம் இருந்து கிடைத்த இழப்பீட்டுத் தொகைக்கான காசோலைகளை, முதல்வர் பேமா காந்து கிராம மக்களிடம் நேற்று வழங்கினார். அதில், ஒரு குடும்பத்துக்கு மட்டும் ரூ.6.73 கோடி இழப்பீடாகக் கிடைத்துள்ளது. அதற்கு அடுத்து மற்றொரு குடும்பத்துக்கு ரூ.2.45 கோடி இழப்பீட்டுத் தொகை கிடைத்தது.
அனைத்து குடும்பங்களுக்கும் குறைந்தபட்சம் ரூ.1.09 கோடி அளவுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. இந்தியாவிலேயே பணக்கார கிராமமாக போம்ஜா மாறியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் நேற்று செய்தி பரவிய நிலையில், அதனை புள்ளி விவரங்களின் அடிப்படையில்தான் உறுதி செய்ய முடியும் என்று மாவட்ட அதிகாரி கூறியுள்ளார். மேலும் முறையான தகவல்கள் கிடைத்த பின்னர், அந்த கிராமம் ஆசியாவிலேயே பணக்கார கிராமமா என அறிவிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.
Average Rating