மும்பை வான்வெளியில் திகில்…நடுவானில் நேருக்கு நேர் வந்த விமானங்கள் …மோதல் தவிர்ப்பு!!
கடந்த 7ம் தேதி ஏ-319 விமானம் மும்பையில் இருந்து போபால் புறப்பட்டுச் சென்றது. இது 27 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அதேபோல், டெல்லியில் இருந்து புனேவுக்கு விஸ்தாரா ஏ-320 என்ற விமானம் சென்று கொண்டிருந்தது. இந்த விமானத்தில் 152 பயணிகள் இருந்தனர். விமானத்தை 29 ஆயிரம் அடி உயரத்தில் பறக்குமாறு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால், விமானி 27,100 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தார்.
இதன் காரணமாக, இரண்டு விமானங்களும் ஒரே பாதையில் 100 அடி வித்தியாசத்தில் வந்து கொண்டிருந்தன. விமானங்கள் நேர் எதிரே அருகில் வந்தபோது விமானிகளின் அறையிலும் உள்ள மோதல் எச்சரிக்கை சாதனம் அபாய ஒலியை எழுப்பியது. உடனே சுதாரித்த விமானிகள், விமானங்களை பாதையை விட்டு வேகமாக விலக்கிச் சென்றனர். இதனால், கண்ணிமைக்கும் நேரத்தில் விமானங்களின் பயங்கர மோதல் தவிர்க்கப்பட்டது. கடந்த புதன்கிழமை இரவு 8 மணிக்கு மும்பை வான் பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது.
விமானங்கள் விபத்தை தவிர்த்து விலகிய பின்னர், அவை இரண்டும் 100 அடி உயர வித்தியாசத்திலும், பக்கவாட்டில் 2.8 கிமீ இடைவெளியிலும் இருந்தன. இதனால், நடுவானில் நடக்க இருந்த மிகப்பெரிய விபத்து நடக்காமல் தவிர்க்கப்பட்டதால், விமானத்தில் இருந்த பயணிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டன. இல்லை என்றால், இந்திய விமான போக்குவரத்து வரலாற்றில் இது ஒரு மோசமான விபத்தாக பதிவாகி இருக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இது தொடர்பாக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “தகவல் பரிமாற்ற குழப்பமே இந்த பயங்கர சம்பவத்துக்கு காரணம்” என்றார்.
Average Rating