பூரான் கடிக்கு மருந்தாகுமா மஞ்சள் தூள்!!
கிராமப்புறங்களில் பூரான் கடித்தால் கடித்த இடத்தில் மஞ்சள் தூள் போடுவதும், மஞ்சள் தூளை தண்ணீரில் கலக்கிக் குடிப்பதையும்தான் விஷமுறிவுக்கு சிகிச்சையாக மேற்கொள்கிறார்கள். மஞ்சள் தூள் ஆன்டிபயாடிக்காக இருந்தாலும் அது மட்டுமே பூரான் போன்ற விஷப்பூச்சிக் கடிக்கு தீர்வாக இருக்குமா?
ஐயம் தீர்க்கிறார் பொது நல மருத்துவர் ராஜராஜன்…
‘‘பூரான் கடி எல்லோருக்கும் ஒரே விதமான பாதிப்பை ஏற்படுத்தாது. பெரியவர்களுக்கு வலியை மட்டும்தான் கொடுக்குமே தவிர, பெரிய பாதிப்பு இருக்காது. குழந்தைகளைக் கடித்து விட்டாலோ, அது இதயத்தைக் கூட பாதிக்கும். பெரியவர்களிலேயே சிலருக்கு Hyper Sensitivity Reaction ஏற்படுத்தும். அதன் காரணமாக உடல் முழுவதும் தடிப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல் ஏற்படும். பூரான் என்றல்ல… எட்டுக்கால் பூச்சி கடித்தால் கூட அவர்கள் இது போன்ற பாதிப்புக்கு ஆளாவார்கள். அவர்களின் உடலின் தன்மை அப்படிப்பட்டது.
பூரான் கடிக்கும் போது கடிபட்ட இடத்திலேயே அதன் கொடுக்கு இருக்கும். இதனால் Cellulitis எனும் நோய்த்தொற்று ஏற்படும். அதனால், பூரான் கடித்த உடனே சோப்பு போட்டு கழுவிவிட வேண்டும். மஞ்சள் தூளை கடிபட்ட இடத்தில் போடுவது நோய்த்தொற்றைத் தடுக்குமே தவிர, முழுமையான பலன் அளிக்காது.
பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை எல்லோருமே பூரான் கடித்தால் Tetanus Toxoid ஊசி போட்டுக் கொள்வது நல்லது. வலி அதிகமாக இருக்கும்போது வலிக்கொல்லி ஊசி போட்டுக்கொள்ளலாம். பெரியவர்கள் 2 மணி நேரம் மருத்துவர் கவனிப்பில் இருக்க வேண்டும். குழந்தைகள் என்றால் குறைந்தது 6 மணி நேர மருத்துவக் கவனிப்பு
அவசியம். இதயத்துடிப்பு சரியாக இருக்கி றதா என்பதை அறிந்து, மேற்கொண்டு பிரச்னை இல்லை என்பதை உறுதி செய்த பிற்பாடு டிஸ்சார்ஜ் ஆவது நல்லது. பூரான் மற்றும் விஷப்பூச்சிக்கடிக்கு மருத்துவ அணுகுமுறையே நல்லது.’’
Average Rating