ராணுவ தளபதி சர்ச்சை பேச்சு: வங்கி ஊழலை திசை திருப்ப பாஜ முயற்சி என காங்கிரஸ் குற்றச்சாட்டு!!
ராணுவ தளபதியின் சர்ச்சைக்குரிய கருத்து மூலம் வங்கி ஊழலை திசைதிருப்ப பா.ஜ முயற்சி செய்வதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. டெல்லியில் அண்மையில் நடந்த கூட்டம் ஒன்றில் ராணுவ தளபதி பிபின் ராவத் பேசினார். அப்போது, அசாமில் பத்ருதீன் அஜ்மல் தலைமையில், அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி என்ற கட்சி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளில், பா.ஜ. விட அதிக வளர்ச்சியை இக்கட்சி பெற்று வருகிறது. வங்கதேசத்தவர்கள் அதிகளவில் வடகிழக்கு மாநிலங்களில் ஊடுருவி வருவதே இக்கட்சி வளர்ச்சிக்கு காரணம். அசாமில் கடந்த சில வருடங்களுக்கு முன் 5 மாவட்டங்களில் முஸ்லிம்கள் அதிகமாக இருந்தனர். தற்போது அது 9 மாவட்டங்களாக மாறிவிட்டது. சீனாவின் ஆதரவோடு, பாகிஸ்தான் சார்பில் நடத்தப்படும் மறைமுகபோரின் ஒரு பகுதியாக வடகிழக்கு மாநிலங்களில் வங்கதேசத்தவர்கள் திட்டமிட்டு குடியேற்றப்பட்டு வருகின்றனர். அங்கு பிரச்னைக்குரியவர்களை வெளியேற்றிவிட்டு, மக்களை ஒற்றுமைபடுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.இவரது பேச்சு பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. ராணுவ தளபதி அரசியல் குறித்து பேசுவதாக பல தரப்பில் புகார் கூறப்பட்டது. இதனையடுத்து ராணுவம் சார்பில் வெளியிடப்பட்ட விளக்கத்தில், கருத்தரங்கில் ராணுவ தளபதி அரசியல் அல்லது மதம் குறித்து எதுவும் இல்லை. அவர் ஒற்றுமை மற்றும் வளர்ச்சி குறித்து மட்டுமே பேசினார். இவ்வாறு அந்த விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ராணுவ தளபதியின் பேச்சு குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம்நபி ஆசாத் கூறியதாவது:ராணுவ தளபதி கூறியது பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை.
ஆனால், பஞ்சாப் நேஷனல் வங்கி ஊழல் விவகாரத்தில் இருந்து மக்களின் கவனத்தை திசைதிருப்ப பா.ஜனதா இத்தகைய உத்திகளை கையாண்டு வருகிறது. இனிவரும் நாட்களில், பல்வேறு கட்சிகள் மற்றும் தலைவர்கள் மீது பா.ஜனதா சுட்டு விரலை நீட்டும். பா.ஜ அமைச்சர்களும், செய்தித்தொடர்பாளர்களும் புதுப்புது குற்றச்சாட்டுகளை முன்வைப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating