தடையை மீறி போராட்டம்: டெல்லியில் விவசாயிகள் கைது!!
கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லியில் போராட்டம் நடத்த 29 மாநில விவசாயிகள் இன்று காலை குவிந்தனர். ரயில்நிலையத்திலே தமிழக விவசாயிகள் 110 பேர் கைதாகினர். விவசாயிகளின் விளை பொருட்களுக்கு லாபகரமான விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும். விவசாயிகள் வாங்கிய அனைத்து வங்கி கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். விவசாய உற்பத்தி பொருள்களுக்கு 50 சதவீதத்திற்கு மேல் மானியம் வழங்கப்பட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தேசிய அளவில் ஒருங்கிணைக்கப்பட்ட 69 அகில பாரத விவசாய அமைப்புகள் சார்பில் இன்று டெல்லியில் போராட்டம் நடத்துவது, இதில் நாடு முழுவதும் உள்ள 3 லட்சம் விவசாயிகளை திரட்டி கலந்து கொள்ள வைப்பது என முடிவு செய்யப்பட்டது.இந்த போராட்டத்தில் பங்கேற்க 29 மாநிலங்களிலிருந்து விவசாயிகள் டெல்லியில் குவிந்தனர்.
தமிழகத்திலிருந்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த 110க்கும் மேற்பட்ட விவசாயிகள் ரயில் மூலம் டெல்லி சென்றனர். இன்று காலை 6.30 மணிக்கு பரிதாபாத் ரயில்நிலையம் சென்றபோது டெல்லி போலீசார் திருச்சி லால்குடி ஜான்மெல்கியோராஜ் தலைமையில் சென்ற 20 விவசாயிகளையும், 7மணிக்கு நிஜாமுதின் ரயில் நிலையத்தில் வைத்து திருச்சியை சேர்ந்த பிரகாஷ், பிச்சைபிள்ளை உள்ளிட்ட 30 விவசாயிகளையும், டெல்லி ரயில் நிலையத்தில் சென்னை மாவட்ட தலைவர் ஜோதிமுருகன் தலைமையில் சென்ற 60 விவசாயிகளையும் கைதுசெய்தனர். இதே போல் அரியானா மாநிலத்திலிருந்து புறப்பட்ட விவசாயிகளை போலீசார் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு தடுத்து கைதுசெய்தனர்.
மேலும் ராஜஸ்தான், பஞ்சாப் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லிக்கு படையெடுத்தனர். வாகனங்களில் வந்து விவசாயிகள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை போலீசார் டெல்லி உழவர் சந்தை மைதானத்தில் அடைத்து போராட்டத்தில் ஈடுபடாத வகையில் தடுத்து வருகின்றனர். ஆனால், பல்வேறு மாநிலங்களிலிருந்து டெல்லியில் திரண்ட விவசாயிகள் ேபாலீசாரின் கெடுபிடியையும் மீறி கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.
Average Rating