மாணவர்களின் பாடச்சுமையை குறைக்க நடவடிக்கை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்!!
பள்ளி மாணவர்களின் பாடச்சுமையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த கல்வியாண்டுக்குள் இது நடைமுறைக்கு வரும் என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு பாடச்சுமை அதிகமாக உள்ளதால், அவர்களின் சிரமத்தை குறைக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களின் பாடச்சுமை அடுத்தாண்டுக்குள் குறையும் என மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:மத்திய பள்ளிக்கல்வி திட்டத்தில் தற்போது பாடச்சுமை கடுமையாக உள்ளதால் மாணவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். இது, பட்டப் படிப்புகளை காட்டிலும் கடினமாக உள்ளது. படிப்பு மட்டுமின்றி விளையாட்டு உள்ளிட்ட துறைகளிலும் மாணவர்கள் தங்களது திறனை வளர்த்துக் கொள்ள வேண்டிய தேவையுள்ளது. எனவே, தற்போதுள்ள பாடத்திட்டத்தில் சீர்திருத்தம் கொண்டுவருவது அவசியமாகும்.
திறனை மேம்படுத்த மாணவர்களுக்கு முழுமையான சுதந்திரம் அவசியம். எனவே, பாடசுமையை குறைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலிடம் தெரிவித்துள்ளேன். பாடத்திட்ட சீர்திருத்தம் 2019ம் கல்வி ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும்.பாடத்திட்டத்தில் கொண்டுவரும் சீர்திருத்தங்கள் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு 2 மாதங்களில் அடுத்த தேர்வு எழுத வாய்ப்பு வழங்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
Average Rating