தலிபான்களை ஒடுக்காதவரையில் அமெரிக்காவின் பாதுகாப்பு நிதி பாகிஸ்தானுக்கு அளிக்கப்படாது(உலக செய்தி)!!
தீவிரவாத புகலிடங்களாக விளங்குவதை மாற்றிக் கொள்ளாதவரையில் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ள பாதுகாப்பு நிதியை மீண்டும் வழங்காது என்று பென்டகன் அறிவித்துள்ளது. தலிபான் மற்றும் ஹக்கானி தீவிரவாத இயக்கங்களுக்கு புகலிடமாக விளங்குவதாக பாகிஸ்தானை அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டிவந்தது. இதையடுத்து பாகிஸ்தானுக்கு அளிக்கப்பட்டுவந்த ரூ. 7.4 ஆயிரம் கோடி பாதுகாப்பு நிதியை கடந்த ஜனவரி மாதத்திலிருந்து தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. சமீபத்தில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க பாதுகாப்பு செயலர் ஜிம் மாட்டிசுடன் பயணம் மேற்கொண்ட மைக் ஆண்ட்ரூஸ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது :
அமெரிக்கா நிறுத்தி வைத்துள்ள பாதுகாப்பு நிதியை மீண்டும் அளிப்பதற்கு பாகிஸ்தான் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நேரடியாகவும் பகிரங்கமாகவும் அமெரிக்கா பலமுறை தெளிவுப்படுத்தியுள்ளது. பாகிஸ்தானில் உள்ள தலிபான் தீவிரவாதிகள் எல்லை கடந்து சென்று தாக்குதல் நிகழ்த்திவிட்டு மீண்டும் பாகிஸ்தான் திரும்பி பத்திரமாக இருக்கிறார்கள். இந்த தீவிரவாத இயக்கங்கள் பாகிஸ்தானில் இருப்பது, அந்த நாட்டிற்கே நல்லதல்ல. அவற்றை அழிப்பது பாகிஸ்தானுக்கு மட்டுமின்றி, ஆப்கானிஸ்தான், இந்தியா மற்றும் அந்த பகுதிக்கே நன்மையை விளைவிக்கும். இதைத்தான் அமெரிக்கா விரும்புகிறது. இதற்கு பாகிஸ்தான் செவிசாய்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Average Rating