லிபியாவிடம் 45 கோடி வாங்கியதாக புகார்: பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஸி கைது(உலக செய்தி)!!
லிபியாவிடம் ரூ.45 கோடி வாங்கியதாக எழுந்த புகார் அடிப்படையில் பிரான்ஸ் முன்னாள் அதிபர் சர்கோஸி கைது செய்யப்பட்டார். பிரான்ஸ் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் சர்கோஸி. வயது 63. இவர் 2007ல் நடந்த அதிபர் தேர்தலில் போட்டியிட்டு வென்று மே மாதம் 16ம் தேதி பதவி ஏற்றார். 2012 மே 15 வரை பிரான்ஸ் அதிபராக இருந்தார். இந்த தேர்தலின் போது பிரசாரம் செய்வதற்காக லிபியாவிடம் இருந்து பணம் வாங்கியதாக சர்கோஸி மீது புகார் எழுந்தது. பிரான்ஸ் மற்றும் லிபியா இடையே வர்த்தகம் நடத்தும் சியாத் தக்கைதீன் என்பவர் இந்த குற்றச்சாட்டை முதலில் எழுப்பினார்.
லிபியாவில் 41 வருடம் ஆட்சி செய்த கடாபி அரசின் ராணுவ உளவுத்துறை தலைவர் அப்துல்லா தன்னிடம் பணம் கொடுத்தார். அதை வாங்கிக்கொண்டு 2006 முதல் 2007 தொடக்கம் வரை மூன்று முறை பாரிஸ் சென்று சர்கோஸி பிரசாரத்திற்காக நிதி வழங்கினேன். ஒவ்வொரு முறையும் ரூ.15 கோடி பணத்தை சூட்கேசில் கொண்டு சென்றேன். ரூ.45 கோடி வரை கொடுத்தேன் என்று தெரிவித்தார். இதை சர்கோஸி மறுத்து வந்தார். இது பற்றி நீதி விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதை தொடர்ந்து சர்கோஸிக்கு நெருக்கமான அலெக்சாந்த்ரே ஜொஹரி என்பவர் கைது செய்யப்பட்டார்.
மேலும் சர்கோஸி அமைச்சரவையில் முக்கிய பதவி வகித்த பிரைஸ் ஹோர்ட்டி பியூக்ஸ் என்பவரும் நேற்று விசாரணைக்கு அழைக்கப்பட்டார். இந்தநிலையில் ரூ.45 கோடி வாங்கிய புகாரில் விசாரணை நடத்துவதற்காக முன்னாள் அதிபர் சர்கோஸியை போலீசார் நேற்று கைது செய்தனர். கடந்த நவம்பர் மாதம் முதல் விசாரணைக்கு வரும்படி சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் சர்கோஸி கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Average Rating