ஊழல் குற்றச்சாட்டு: இஸ்ரேல் பிரதமரிடம் மீண்டும் விசாரணை(உலக செய்தி)!!
ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவிடம் போலீசார் 2வது முறையாக விசாரணை நடத்தி உள்ளனர்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது தொழிலதிபர் நண்பர்களிடம் விலையுயர்ந்த பரிசுப்பொருள் பெற்றதாகவும், அதற்கு பிரதிபலனாக அவர்களுக்கு சாதகமான சட்டத்தை இயற்றும் வகையில் பத்திரிகையில் செய்தி வெளியிட கோடிக்கணக்கில் லஞ்சம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. அப்பத்திரிகை, அந்நாட்டின் பிரபல தொலைதொடர்பு நிறுவனமான பெசெக் டெலிகாம் நிறுவனத்திற்கு சொந்தமானது. எனவே, பெசெக் டெலிகாம் நிறுவனத்திற்கு நெதன்யாகு கோடிக்கணக்கில் சலுகைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.இந்த குற்றச்சாட்டுகளை நெதன்யாகு மறுத்து வரும் நிலையில், அந்நாட்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி சமீபத்தில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், நெதன்யாகு ஊழல் செய்ததற்கான முகாந்திரம் இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், பிரதமர் நெதன்யாகுவை அவரது வீட்டில் வைத்து போலீசார் 2வது முறையாக நேற்று விசாரணை நடத்தி உள்ளனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் தகவல் வெளியிட மறுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நெதன்யாகுவின் மனைவி சாரா, மகன் யேர் ஆகியோரிடமும் போலீசார் நேற்று விசாரித்திருப்பதாக அந்நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதற்கிடையே, நெதன்யாகுவின் நீண்டகால குடும்ப செய்தித்தொடர்பாளர் நிர் ஹெபிட்ஸ் மற்றும் உதவியாளர் பில்பர் ஆகியோரிடம் போலீசார் விசாரித்துள்ளனர். இதில் ஹெபிட்ஸ் கைதாகி பின்னர் விடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இருவருமே குற்றத்தை ஒப்புக் கொண்டு அரசு தரப்பு சாட்சியாக மாறிவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Average Rating