மலையாளத்திலும் நயனின் ஆதிக்கம்..!!
தமிழ், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்திவரும் நயன்தாரா தற்போது மலையாளப் படங்களில் தொடர்ச்சியாக ஒப்பந்தமாகிவருகிறார்.
தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத நடிகையாக மாறியுள்ளவர் நயன்தாரா. இவர் தற்போது இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா, சயிரா நரசிம்ம ரெட்டி போன்ற படங்களில் பிஸியாக நடித்துவருகிறார். பெரிய ஹீரோக்களின் படங்களில் மட்டுமே நடிப்பது என்ற நிலையை மாற்றி, புதுமுகங்களுக்கு வாய்ப்பளித்து, பெண்களுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் தரமான படங்களைத் தேர்வு செய்து நடித்துவருகிறார். இதனால் இவருடைய நடிப்பில் சமீபத்தில் வெளியான அனைத்துப் படங்களும் அவருக்கெனத் தனி முத்திரையைப் பதித்துள்ளன.
தமிழ் மற்றும் தெலுங்கில் கவனம் செலுத்தி தொடர்ச்சியாக பல படங்களில் நடித்துவரும் இவர் மலையாளத்திலும் அவ்வப்போது நல்ல படங்களைத் தேர்வு செய்து நடித்துவருகிறார். இவருடைய நடிப்பில் மலையாளத்தில் இறுதியாக வெளியான படம் ‘புதிய நியமம்’. இந்தப் படம் இவருக்குச் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதை வாங்கித் தந்தது.
‘புதிய நியமம்’ படத்திற்குப் பிறகு மலையாளத்தில் விளம்பரத் தயாரிப்பாளரான மகேஷ் வெட்டியார் இயக்கத்தில் நயன்தாரா நடிக்க உள்ளார். ‘கொட்டையம் குர்பானா’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படம் நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் அழுத்தமான கதாபாத்திரம் கொண்டதாக உருவாகவுள்ளது. இந்தப் படத்திற்கு மது நீலகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். மேலும் நயன்தாரா மலையாளத்தில் நடிகர் நிவின் பாலி நடிப்பில் உருவாகவுள்ள ‘லவ் ஆக்ஷன் டிராமா’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating