20 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் முடிவுகள
20 உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஐந்து உள்ளுராட்சி சபைகளை கைப்பற்றியது. இதேநேரம் ஐக்கிய தேசியக் கட்சி நான்கு உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றியுள்ளது.
எல்பிட்டிய பிரதேச சபையை ஐ.ம.சு.முன்னணியின் ஆதரவைப் பெற்ற தேசிய அபிவிருத்தி முன்னணி வெற்றி பெற்றுள்ளதுடன் கொழும்பு மாநகர சபையின் ஐ.தே.க. ஆதரவிலான சுயேற்சைக்குழு வெற்றி பெற்றுள்ளது. முஸ்லிம் காங்கிரஸ் நான்கு உள்ளுராட்சி சபைகளைக் கைப்பற்றியுள்ளது.
இதேவேளை காத்தான்குடி நகரசபையையும் ஏறாவூர் நகரசபையையும் முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவைப் பெற்ற சுயேற்சைக் குழுக்கள் கைப்பற்றியுள்ளன. அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் அக்கரைப்பற்று பிரதேசசபையைக் கைப்பற்றியுள்ளது. முன்னாள் எம்.பி.யான எஸ்.சதாசிவம் செயலாளராகவிருக்கும் இலங்கை ஜனநாயக ஐக்கிய முன்னணி உடபலாத்த பிரதேசசபையைக் கைப்பற்றியுள்ளது.
இலங்கை தமிழரசுக்கட்சி நாவிதன்வெளி பிரதேசசபையைக் கைப்பற்றியுள்ளது. மட்டக்களப்பு மாவட்டத்தில் முதன்முறையாக ஒரு பிரதேசசபையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது. அமைச்சர் அமீர்அலியின் முயற்சியாலும் கடும் உழைப்பினாலும் கோறழைப்பற்று பிரதேசசபையை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கைப்பற்றியுள்ளது.
20 உள்ளுராட்சி சபைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட 312 உறுப்பினர்களில் 72பேர் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பிலும் 68பேர் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பிலும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்கள் 30பேர் வெற்றி பெற்றுள்ளனர்.
தமிழரசுக் கட்சி சார்பில்12 பேரும், ஜே.வி.பி.சார்பில் 19பேரும், ஜாதிக ஹெலஉறுமய சார்பில் 13பேரும் வெற்றி பெற்றுள்ளனர். கொழும்பு மாநகரசபைத் தேர்தலில் முதன்முதலாகப் போட்டியிட்ட ஜனநாயக ஐக்கிய முன்னணி இத்தேர்தலில் இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது.
Average Rating