மாதவிலக்கு நாட்களின் சுகாதாரம்!!(மருத்துவம்)

Read Time:12 Minute, 51 Second

‘‘ஒரு பெண்ணின் மொத்த வாழ்நாளில் 6 முதல் 7 ஆண்டுகள் மாதவிடாய் காலமாக இருக்கிறது. ஆனாலும் உலகம் முழுவதும் மாதவிடாய் சுகாதாரத்தின் முக்கியத்துவம் பற்றிய அறியாமையும், அவளுக்கு அதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுவதும்தான் எதார்த்தமாக இருக்கிறது. தனக்கு ஏற்படும் மாதவிலக்கை சாபக்கேடாகவும், அதைப்பற்றி வெளிப்படையாக பேசத் தயங்கும் பெண்களை இன்றளவும் பார்க்கிறோம்.

2017-ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி இந்தியாவில் 12 சதவீதப் பெண்கள் மட்டுமே சானிட்டரி நாப்கின்களை பயன்படுத்துவதாகவும், கிராமப்புறங்களில் மாதவிடாய்கால அசௌகரியங்களால் பல பெண் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதையே தவிர்ப்பதாகவும் தெரிகிறது’’ என்று கவலையுடன் பேசத் தொடங்குகிறார் மகப்பேறு மகளிர் நல மருத்துவர் பத்மப்ரியா.

‘‘பருவமெய்திய பெண் குழந்தையின் தாயே, தானும் ஒரு பெண் என்பதை மறந்து தன் மகள் வீட்டுக்கு விலக்கனாதும் அதை அழுக்காக பார்ப்பது இன்றும் கண்கூடு. ஒரு தாய் தன்னுடைய மகளுக்கு அவள் பூப்பெய்வதற்கு முன்பே உடலில் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் மாதவிடாய் பற்றிய சந்தேகங்கள் அனைத்தையும் வெளிப்படையாக பேசிப் புரிய வைக்க வேண்டும்.

இப்போதெல்லாம் 9, 10 வயதிலேயே பெண் குழந்தைகள் பருவமடைந்து விடுகிறார்கள். இப்போது பிறப்புறுப்பில் தொற்று ஏற்பட்டு சிகிச்சைக்கு வரும் பள்ளிசெல்லும் பெண்குழந்தைகள் ஏராளம். காரணம், மாதவிலக்கு சுகாதாரம் பற்றி அவர்களுக்கு தெரிவதில்லை.

ஒரு பெண்ணுக்கு அவளது 10 முதல் 15 வயதுக்குள் இனப்பெருக்க உறுப்புகள் செயல்பட ஆரம்பித்து பருவமடைகிறாள். அதனால் 8 வயதிலேயே தாய் அதைப்பற்றி பேச ஆரம்பித்துவிட வேண்டும். அந்த நாட்களில் பின்பற்ற வேண்டிய சுகாதாரத்தைப் பற்றியும் சொல்லிக் கொடுக்க வேண்டும். சராசரியாக ஒரு பெண்ணின் 50 வயது வரை 28 நாட்களுக்கு ஒருமுறை மாதவிலக்கு ஏற்படுகிறது. 2 முதல் 7 நாட்கள் வரை ஒவ்வொருவரின் தனிப்பட்ட உடலியலுக்கு ஏற்றவாறு உதிரப்போக்கு நீடிக்கும்.

இந்த உதிரப்போக்கால் அவளுக்கும், அதன்மூலம் மற்றவர்களுக்கும் தொற்றுக்கள் பரவக்கூடும். இதையெல்லாம் வெளிப்படையாகப் பேசுவார்களா என்று நினைக்கலாம். ஆனால், பேச வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இப்போதும் கிராமப்புறப் பெண்கள் சாதாரணத் துணியை உபயோகிக்கிறார்கள். நகர்ப்புறங்களில் பள்ளி, கல்லூரி செல்லும் பெண்கள் நாப்கின்களை மாற்றக்கூட தனி இடம் இல்லாமலும், நேரம் இல்லாமலும் பிறப்புறுப்பு தொற்று நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.

மாதவிடாய் காலங்களில் சரியான சுகாதாரம் கடைபிடிக்காமல் கர்ப்பப்பை வாய் புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்ற கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட நோய்களால் பெண்கள் பாதிப்படைவது அதிகரித்து வருகிறது’’ என எச்சரிக்கும் மருத்துவர் மாதவிலக்கு நாளில் கடைபிடிக்க வேண்டிய சுகாதாரக் குறிப்புகளை பட்டியலிடுகிறார்.

* இப்போது டாம்பூன்கள், சானிட்டரி நாப்கின்கள், மென்சுரல் கப்கள் என பல வழிகள் பெண்களுக்கு கிடைக்கிறது. இவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்து உபயோகிக்கலாம். உதிரப்போக்கின் அளவுக்கு தகுந்தவாறும், உங்கள் உடலுக்கு ஒப்புக் கொள்ளக்கூடிய ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இவற்றில் நாப்கின்தான் சிறந்தது. டாம்பூன் (Tampoon)உபயோகிப்பவர்களுக்கு Toxic Shock Syndrome ஏற்படுவதற்கு சாத்தியமுண்டு.

* சிலர் நாப்கின் நனையாதவரை மாற்ற மாட்டார்கள். அப்படிச் செய்வது தவறு. உதிரப்போக்கு குறைவாக இருந்தாலும், நாப்கின் நனையாவிட்டாலும்கூட 4 மணி நேரத்துக்கு ஒருமுறை கண்டிப்பாக மாற்றிவிட வேண்டும். ஏனெனில், ஒருமுறை உடலிலிருந்து வெளியேறி ஏற்கனவே நாப்கினில் படிந்திருக்கும் உதிரம் பூஞ்சைத் தொற்றை ஏற்படுத்தும்.

இதனால் சிறுநீரகப்பாதைத் தொற்று, பிறப்புறுப்பில் அழற்சி, தொற்றுகள் ஏற்படலாம். பள்ளி செல்லும் பெண்குழந்தைகள் இடைவேளைகளிலோ, சாப்பாட்டு நேரத்திலோ சென்று மாற்றிக் கொள்ள வேண்டும். கல்லூரி, வேலைக்கு செல்லும் பெண்களும் மறக்காமல் இதை பின்பற்றவேண்டும்.

* பெரிய நிறுவனங்களில் வேலை செய்யும் பெண்களுக்கு பிரச்னை இல்லை. ஆனால், ஜவுளிக்கடைகளிலும், மற்ற சில்லரை வியாபார நிறுவனங்களிலும் வேலை செய்யும் பெண்கள் நாப்கினை மாற்றக்கூட நேரம் இல்லாமலும், தன்னுடைய பிரச்னையை வெளியே சொல்ல சங்கடப்பட்டுக் கொண்டும் நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகிறார்கள். இதுபோன்ற நிறுவனங்கள் பெண்களின் பிரச்னையைப் புரிந்து கொண்டு அவர்களுக்கு சௌகர்யங்கள் செய்து தர வேண்டும்.

* முழுவதும் நனைந்த நாப்கின்களை மாற்றாமல் இருப்பதால், சில பெண்களுக்கு தொடைப்பகுதியில் சிராய்ப்புகள் தோன்றும். இதை Pad rash என்று சொல்கிறோம். தொடை இடுக்குகளில் நனைந்த பேடுகள் உராசுவதால் இது வருகிறது. அதனால் ஈரப்பதம் இல்லாமல் உலர்வாக வைத்துக்கொள்வது முக்கியம். அப்படி Pad Rash வந்தால் அதற்கு ஆன்ட்டிசெப்டிக் ஆயின்மென்ட் தடவிக் கொள்ளலாம்.

* மாதவிடாய் நேரங்களில் உதிரத்துளிகள் பிறப்புறுப்பைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் ஒட்டிக்கொண்டு இருக்கலாம். அதை சரியாக சுத்தம் செய்யாவிடில் துர்நாற்றம் வீசும். ஒவ்வொருமுறை நாப்கின் மாற்றும்போதும் சுத்தமான தண்ணீராலோ, அல்லது ஈரப்பதமுள்ள டிஷ்யூ பேப்பராலோ துடைத்து சுத்தம் செய்துவிட வேண்டும்.

* இயற்கையிலேயே பெண்ணின் பிறப்புறுப்புக்கு தன்னைத்தானே சுத்தப்படுத்திக்கொள்ள மற்றும் பாக்டீரியா தொற்றுகளிலிருந்து பாதுகாத்துக் கொள்ளக்கூடிய பாதுகாப்பு அமைப்பு இருக்கிறது. அதனால் சோப்புத் தண்ணீரால் பிறப்புறுப்பு உட்பகுதியை கழுவ வேண்டியதில்லை. சோப்பு நீர் நன்மை செய்யும் பாக்டீரியாவை அழித்துவிடும். வெளிப்புறப் பகுதிகளை வேண்டுமானால் சோப்பு நீரால் சுத்தப்படுத்தலாம்.

அவ்வாறு சுத்தம் செய்யும்போது ஈரப்பதம் உள்ள டிஷ்யூ பேப்பரால் யோனியிலிருந்து கீழ்ப்புறமாக மலவாய் வரை துடைக்க வேண்டும். கீழிருந்து மேலாக துடைப்பதால் மலவாய்ப்பகுதியில் இருக்கும் கிருமிகள் பிறப்புறுப்புக்குள் சென்றுவிட வாய்ப்புண்டு.

* எல்லாவற்றையும் விட உபயோகித்த நாப்கின்களையோ, மற்றவற்றையோ பாதுகாப்பாக அப்புறப்படுத்துவதும் முக்கியம். இப்போது நாப்கின்களோடு பாலிதீன் உறைகளும் சேர்த்தே வருகிறது. அந்த பாலிதீன் உறைக்குள் வைத்து அதன்மேல் ஒரு பேப்பரைச் சுற்றி அப்புறப்படுத்துவதே சுகாதாரமானது. நீங்கள் கவர் செய்யாமல் அப்படியே எறியும் நாப்கின்களை தெருவோரக் குப்பைத் தொட்டியிலிருந்து நாய்கள் வெளியே போட்டுவிடுவது நாம் அன்றாடம் பார்க்கும் காட்சி.

துப்புரவுத் தொழிலாளர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள். அவர்களுக்கும் நோய்த்தொற்று ஏற்படாதவாறு சுத்தத்தை கடைபிடிப்பது நம்முடைய கடமை. டாய்லெட்டில் போட்டு ஃப்ளெஷ் செய்வதால் கழிவுநீர்க் குழாய்கள் அடைத்துக் கொள்ளும். அதை சுத்தம் செய்வதும் துப்புரவுத் தொழிலாளர்கள்தான். இந்த சமூக அக்கறை ஒவ்வொருவருக்கும் வேண்டும்.

* இன்றளவும்கூட மாதவிடாய் நாட்களில் குளிக்கக்கூடாது என்று ஒரு தவறான நம்பிக்கை சிலரிடம் உள்ளது. அது தவறான நம்பிக்கை. கண்டிப்பாக காலை, மாலை இருவேளையும் தவறாமல் குளிக்க வேண்டும்.

* ஏதாவது ஒரு முறையை, ஒரு பிராண்டை வழக்கமாக உபயோகிக்க வேண்டும். சிலர் இந்த மாதம் ஒரு பிராண்டு, அடுத்த மாதம் ஒரு பிராண்டு. இன்று நாப்கின், நாளை டாம்பூன் என்று மாற்றி மாற்றி உபயோகிப்பார்கள்.

இது சில நேரங்களில் அலர்ஜியை ஏற்படுத்திவிடும் என்பதால் தனக்கு எந்த வகையான முறை ஒத்துக் கொள்கிறதோ அதை தொடர்ந்து கடைபிடிப்பது நல்லது. இப்போது இயற்கைப் பொருட்களால் ஆன நாப்கின்களும் சந்தையில் வந்துவிட்டது என்பதால் முடிந்தவர்கள் சுற்றுச்சூழலை பாதிக்காத இயற்கைப் பொருட்களால் ஆன நாப்கின்களை பயன்படுத்தத் தொடங்கலாம்.

*இறுதியாக நமக்கு எத்தனை நாட்களில் மாதவிடாய் சுழற்சி ஏற்படும் என்பதை நன்றாக நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். சுழற்சி சரியாக வருபவர்கள் 20-வது நாள் தொடங்கி கைப்பையில் தயாராக நாப்கினை வைத்துக் கொள்ளலாம்.

மாதவிடாய் சுழற்சியில் மாறுபாடு இருப்பவர்கள் எப்போதுமே கைவசம் நாப்கினை வைத்திருப்பது நல்லது. இதனால் தேவையற்ற சங்கடங்களை தவிர்க்கலாமே. அதேபோல் கைப்பையில், சானிடைசர், பேப்பர் டவல், துணி டவல், தண்ணீர் பாட்டில், ஆன்ட்டிசெப்டிக் ஆயின்ட்மென்ட் போன்றவற்றை வைத்துக் கொள்ள வேண்டும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீண்டும் பொலிஸில் சிக்கிய ஜெய் !!(சினிமா செய்தி)
Next post காதலரை பற்றி மனம் திறந்த நடிகை… !!(சினிமா செய்தி)