அநாகரிகம் பண்பாடாகிறது!!(கட்டுரை)

Read Time:19 Minute, 14 Second

கடந்த மாதம் 26 ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்கவைப் பிரதமர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமித்ததில் இருந்து, நாட்டில் நிலவி வரும் அரசியல் நிச்சயமற்ற தன்மை, இன்னமும் மாறவில்லை.

நாடாளுமன்றத்தில், தமக்கே பெரும்பான்மை பலம் இருப்பதாக, ரணில் விக்கிரமசிங்க கூறி வருகிறார். மஹிந்த அணியினரும், தமக்கே பெரும்பான்மை பலம் இருக்கிறது என்கின்றனர்.

ஆனால், மஹிந்த பிரதமராக நியமிக்கப்படும் போது, அவருக்குப் பெரும்பான்மை பலம் இல்லாத காரணத்தாலேயே, நாடாளுமன்றக் கூட்டத் தொடரை, ஜனாதிபதி ஒத்தி வைத்தார் என்பது, உலகமே அறிந்த உண்மை.

ஜனாதிபதி மைத்திரிபால, மஹிந்த ராஜபக்‌ஷவைப் பிரதமராக நியமித்த போதிலும், மஹிந்தவுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை ஆதரவு, அதாவது 113 எம்.பிக்களின் ஆதரவு, இருக்கிறதா என்ற கேள்வி இன்றும் எழுப்பப்பட்டு வருகிறது.

அந்தப் பெரும்பான்மை ஆதரவு, தமக்கு இருக்கிறது என, மஹிந்த ஆதரவாளர்கள் கூறி வந்த போதிலும், இந்தக் கட்டுரை எழுதப்படும் வேளையிலும், அதை நம்பக் கூடியதாக இருக்கவில்லை.

கடந்த பொதுத் தேர்தலின் போது, மைத்திரிபாலவின் தலைமையிலும் மஹிந்தவின் தலைமையிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பிரிந்திருந்தது. எனினும் இரு குழுக்களும், ஒரே கட்சியின் கீழ், அதாவது ஐ.ம.சு.முவின் கீழ் போட்டியிட்டன.

பின்னர் இரு குழுக்களும், கடந்த மூன்று ஆண்டுகளாகப் பிரிந்து செயற்பட்டனர். இப்போது, மஹிந்த பிரதமராக நியமிக்கப்பட்டதை அடுத்து, அவர்கள் ஒன்றிணைந்துள்ளனர். அவர்களுக்குத் தேர்தலில், 95 ஆசனங்கள் மட்டுமே கிடைத்திருந்தன.

இப்போது, ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த ஏழு எம்.பிக்களும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஓர் உறுப்பினரும் ஈ.பி.டி.பி தலைவர் டக்ளஸ் தேவானந்தா உட்பட, ஒன்பது பேர் மஹிந்தவுடன் இணைந்து இருப்பதால், நாடாளுமன்றத்தில் அவர்களது பலம் 104 ஆக உயர்ந்துள்ளது.

ஐ.தே.கவின் உறுப்பினர்கள் ஏழு பேர், மஹிந்தவுடன் இணைந்ததை அடுத்து, ஐ.தே.கவின் பலம் 106 இலிருந்து 99 ஆகக் குறைந்துள்ளது. சபாநாயகர் கரு ஜயசூரிய தவிர்ந்து 98 ஐ.தே.ககாரர்களே ரணிலை ஆதரிக்கின்றனர். ஆயினும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஏனைய 15 உறுப்பினர்களும் ஐ.தே.கவுக்கு ஆதரவளிப்பதாகவே தெரிகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் சின்னத்தில் போட்டியிட்ட ஒருவரும் ரணிலையே ஆதரிக்கிறார். இன்னமும் ரணில் விக்கிரமசிங்கவுக்கே பெரும்பான்மை பலம் இருப்பதாகத் தெரிகிறது.

இந்த நிலையில், அரசியல் நாகரிகத்துக்கு இலங்கையில் என்ன இடம் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள, இது சிறந்த சந்தர்ப்பமாக அமைந்துள்ளது. தமது அணியின் வெற்றிக்காக, இரு அணிகளும் எந்தக் கீழ்தரமான செயலிலும் இறங்கத் தயார் எனக் காட்டிக் கொண்டு இருக்கிறார்கள்.

ஏற்கெனவே மஹிந்தவின் பக்கம் தாவியவர்களில் சிலர், பணத்துக்காகவும் அமைச்சர் பதவிகளுக்காகவுமே அவ்வாறு தாவியுள்ளனர் என்பது, ஊகிக்கக் கூடியதாக இருக்கிறது.

ஏனெனில், இதற்கு முன்னரும் ஆட்சி மாற்றங்களின் போது, பணம் புகுந்து விளையாடியது. சந்திரிகா குமாரதுங்கவின் அரசாங்கத்திலிருந்து 12 பேர் ஐ.தே.கவின் பக்கம் தாவியதால், 2001 ஆம் ஆண்டு ஒக்டோபர் 10 ஆம் திகதி, ஜனாதிபதி சந்திரிகாவுக்கு, அந்த அரசாங்கத்தைக் கலைக்க வேண்டிய நிலை உருவாகியது.

அப்போது, அவ்வாறு கட்சி தாவியவர்களில் சிலருக்கு மூன்று கோடி ரூபாய் வீதம் வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதற்குப் பின்னர், 2007ஆம் ஆண்டு, 17 ஐ.தே.க காரர்கள் மஹிந்தவுடன் இணைந்தனர். அப்போதும் மஹிந்த, தாராளமாகப் பணம் வீசியதாகக் கூறப்பட்டது.

ஆனால் இப்போது, அந்த இலஞ்சத் தொகை 20 கோடி ரூபாய்க்கு மேல் எனக் கூறப்படுகிறது. தமக்கு 50 கோடி ரூபாயும் ஓர் அமைச்சர் பதவியையும் வழங்க, மஹிந்த தரப்பினர் முயற்சித்ததாக, புத்தளம் மாவட்ட ஐ.தே.க எம்.பி பாலித்த ரங்கே பண்டார கூறுகிறார்.அதற்கு ஆதாரமாக, ஒலிப் பதிவுகளையும் பகிரங்கப்படுத்தி உள்ளார்.

ரங்கே பண்டாரவுக்கு வழங்குவதாகக் கூறப்பட்டதாக அவர் கூறும் தொகை, வெளியிடப்பட்ட ஒலிப் பதிவுகளில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அவருக்கு வெகுமதிகள் காத்திருப்பதாக, ஒருவர் கூறுவது, மிகத் தெளிவாகக் கேட்கிறது.

முன்னைய சம்பவங்களைப் போலவே, இம்முறையும் ஏற்கெனவே மஹிந்தவுடன் இணைந்த, அல்லது இனி இணையப் போகும் எவரும், கொள்கைக்காகவோ, மக்களின் நலனுக்காகவோ மஹிந்தவுடன் இணைந்து கொள்ளவில்லை என்பது, சிறு பிள்ளைக்கும் தெரிந்த விடயம்.

கொள்கைக்காக இணைவதாக இருந்தால், ஏன் முன்னரே இணையவில்லை, ஏன் பதவிகளைப் பெறுகிறார்கள், அவர்களுக்கு அமைச்சர் பதவிகளை வழங்க, அவர்கள் என்ன அந்தந்தத் துறைகளில் நிபுணர்களா?

இலஞ்சமாக வழங்கப்படும் இந்தப் பணம், எங்கிருந்து வருகிறது, அதேவேளை, அவ்வாறு இலஞ்சம் வழங்குவோர், ஏன் அதை வழங்குகிறார்கள்? அந்தப் பணம், ஏற்கெனவே பொதுச் சொத்தைக் கொள்ளையடித்த பணம் என்பது, சகலரும் அறிந்த உண்மை.

2001 ஆம் ஆண்டு, ஐ.தே.க சார்பில் வழங்கப்பட்ட இலஞ்சப் பணம், சூதுத் தொழிலில் ஈடுபடும் ஒருவர், அவரது சொந்தப் பணத்திலிருந்து வழங்கியதாக, அப்போது கூறப்பட்டது. ஆனால், பின்னர் அவர், அந்த ஐ.தே.க அரசாங்கத்திலிருந்து வெகுவாகப் பயனடைந்தார்.

ஏற்கெனவே கொள்ளையடித்த பொதுச் சொத்திலிருந்து, அந்த இலஞ்சத்தை வழங்கினாலும், மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றிக்கொள்வதற்காகவே, அது வழங்கப்படுகிறது.

ஆட்சியைக் கைப்பற்றிக் கொண்டதன் பின்னர், அவ்வாறு செலவழித்த பணத்தைப் போல, பல நூறு மடங்கு பணத்தை, எவ்வாறு சம்பாதிக்கலாம் என்பது, இலஞ்சம் வழங்குவோருக்குத் தெரியும்.

அரசியல்வாதிகளிடையே அதிகாரப் போட்டியின் போது, இவ்வளவு தொகைப் பணம் கைமாறினாலும், சாதாரண தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற, அவர்கள் இவ்வாறு பணம் செலவழிக்கத் தயாரில்லை.

இவ்வாறு கைமாறும் பணத்தோடு ஒப்பிடுகையில், தொழிலாளர்களின் கோரிக்கைகள் எவ்வளவு சிறியவை என்பதை உணர முடிகிறது. உதாரணமாகத் தற்போது, தோட்டத் தொழிலாளர்கள், சுமார் 300 ரூபாயால் தமது நாள் சம்பளத்தை, அதிகரிக்குமாறே கோருகிறார்கள்.

முக்கியமானதொரு விடயம் என்னவென்றால், தமக்குப் பாதகமானால் மட்டுமே, அரசியல்வாதிகளும் சாதாரண மக்களும் இந்த அரசியல் இலஞ்சத்தை, அநாகரிகம் எனக் கூறுகிறார்கள். தமக்குச் சாதகமானால் எவரும், அதை அநாகரிகம் என்று கூறுவதில்லை.

இந்நாள்களில் ஐ.தே.க காரர்கள் பணத்துக்கும் பட்டத்துக்குமே விலை போகிறார்கள் என்பது, இவ்வளவு தெளிவாகிய பின்னரும், மைத்திரியையும் மஹிந்தவையும் ஆதரிக்கும் எந்தவொரு கல்விமானும், புத்திஜீவியும் மட்டுமல்லாது, எந்தவொரு சமயத் தலைவரும் இந்த இலஞ்சம் அநாகரிகமானது என்றோ, சமய சித்தாந்தங்களுக்கு முரணானது என்றோ கூறவில்லை. இத்தகையோரது கல்வி அறிவு எதற்கு, சமயப் போதனைகள் எதற்கு? எனினும், அரசியல்வாதிகள் பணத்துக்கும் பதவிகளுக்கும் தம்மை விற்று வாழ்வதைப் புரிந்து கொள்வது, கடினமானதல்ல.

வடக்கில் தமிழீழ விடுதலைப் புலிகளும் தெற்கில் மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட சில சிறிய இடதுசாரி அமைப்புகளும் தவிர்ந்த, நாட்டில் எந்தவோர் அரசியல் கட்சிக்கும் அமைப்புக்கும், அரசியல் இலட்சியங்கள் இருந்ததில்லை. அக்கட்சிகளையும் அமைப்புகளையும் ஆதரிக்கும் மக்களில் பெரும்பாலானோருக்கும், அரசியல் குறிக்கோள்கள் இல்லை.

அரசியல்வாதிகள் ஜனநாயகம், நல்லாட்சி, சோஷலிஸம், அபிவிருத்தி, சட்டத்தின் ஆட்சி, மக்களின் ஆணை, தேசப்பற்று என்றெல்லாம் தத்துவம் பேசுவார்கள். ஆனால், அந்த வார்த்தைகளின் பின்னால், அவர்களது சொந்த நலன்கள் மட்டுமே இருக்கின்றன.

ஆகக் கீழ் மட்டத்தில் இயங்கும் அரசியல்வாதிகளின் ஆரம்ப நோக்கம், எப்படியாவது பிரதேச சபையொன்றுக்கு தெரிவாவதேயாகும். தெரிவாகிய பின்னர், மக்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்பதைப் பற்றி, அவர்களுக்கு எந்தவித அக்கறையோ, குறிக்கோளோ, தேவையோ இல்லை.

அவர்களுக்குத் தேவையாவதெல்லாம், தமக்கும் தமது சொந்த பந்தங்களுக்கும் வசதிகள், வாய்ப்புகளைப் பெற்றுக் கொள்வது மட்டுமே.

அவரது அடுத்த முயற்சி, மாகாண சபைக்குத் தெரிவாவதாகும். அதற்காகத் தமது கட்சியின் தலைவர்கள் செய்யும், அத்தனை ஜனநாயக விரோத செயல்களையும் பொதுச் சொத்துகளைக் கொள்ளையடிப்பதையும் ஆதரிப்பார்.

சர்வாதிகார 18 ஆவது அரசமைப்புத் திருத்தத்தை, மஹிந்த நிறைவேற்றும் போது, “அது பிழை” எனக் கூறி, மஹிந்தவைக் கைவிட்ட எவரும், இந்த நாட்டில், இரண்டு கோடிக்கு அதிகமான மக்கள் மத்தியில் இருக்கவில்லை.

ஐ.தே.கவின் துணையுடன், மத்திய வங்கி பிணைமுறி கொள்ளை இடம்பெற்ற போது, “அது பிழை” எனக் கூறி, ஐ.தே.கவைவிட்டு விலகிய எவரும் இல்லை.

நல்ல சந்தர்ப்பம் ஒன்று கிடைத்தவுடன் அரசியல்வாதிகள், கட்சி மாறுகிறார்கள். மாறிவிட்டு, தாம் முன்னர் இருந்த கட்சியையும் அதன் தலைவர்களையும் விமர்சனம் செய்வார்கள். அவரைச் சார்ந்த படித்தவர்களும் புத்திஜீவிகளும் சமயத் தலைவர்களும் இந்த அநாகரிகத்தைக் கண்டுகொள்வதில்லை.

மாகாண சபைக்குத் தெரிவானவர்களின் அடுத்த இலக்கு, நாடாளுமன்றமே. அதற்காகக் கட்சி மாறுவதற்கோ, தமது தலைவர்களின் ஜனநாயக விரோத செயல்களையும் பகற்கொள்ளைகளையும் எவ்வித வெட்கமுமின்றி ஆதரிப்பதற்கோ அவர்கள் தயங்குவதில்லை. அவர்களைச் சார்ந்த படித்தவர்களும் புத்திஜீவிகளும் சமயத் தலைவர்களும் அதையும் ஆதரிக்கிறார்கள்.

நாடாளுமன்றத்துக்குத் தெரிவான நாள் முதல், அவரது கனவு மக்களுக்குச் சேவை செய்வதல்ல. அதற்காக அவரிடம் எவ்வித திட்டமும் இல்லை. அவரது அடுத்த குறிக்கோள், பிரதி அமைச்சர் பதவியொன்றே.அதற்கு அடுத்து அமைச்சர் பதவியொன்று! அதற்காகவும் அவர்கள் எதையும் செய்யத் தயாராக இருக்கிறார்கள். அவருக்கு நாகரிகமும் பண்பாடும் அதுவே.

அரசியல்வாதிகள் இப்படியென்றால், மக்கள் ஏன் இதை விளங்கிக் கொள்ளாமல் இருக்கிறார்கள், ஏன் இதை ஆதரிக்கிறார்கள்? அரசியல் என்பது, தமது பிரச்சினைகளையும் தம்மைப் போன்றவர்களின் பிரச்சினைகளையும் கூட்டாகத் தீர்த்துக் கொள்ளும் கருவி என்பதை, அவர்கள் புரிந்து கொண்டதில்லை.

பெரும்பாலானோருக்கு அரசியல் என்பது, ஒரு சூதாட்டம் மட்டுமே. தமது ஊரில், அலுவலகத்தில் தம்மைச் சுற்றியுள்ள மற்றக் கட்சிக்காரர்கள் மத்தியில், தாம் வெற்றியாளனாகக் காணப்பட வேண்டும் என்ற சிறுபிள்ளைத்தனமானதொரு நோக்கம் மட்டுமே, அவர்களிடம் இருக்கிறது.

எனவே, அவர்களும் கொள்கைகளைப் பாராது, மற்றொரு கட்சி வெற்றி பெறும் போல் இருந்தால், கட்சி மாறுகிறார்கள். ஒரு சிலர், அரசியல்வாதிகள் எத்தனை கொலைகளைச் செய்தாலும், எத்தனை கொள்ளைகளைச் செய்தாலும் ஒரு தொழில்வாய்ப்புக்காக அல்லது ஒரு வீட்டுக்காக, அரசியல்வாதிகளை ஆதரிக்கிறார்கள், கட்சி மாறுகிறார்கள்.

தற்போதைய நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் சொந்த நலனைக் கருதியே செயற்பட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில், தாம் தோல்வி அடைந்திருந்தால், இந்நேரம் தாம், ஆறடி நிலத்தடியில் இருந்திருப்பேன் என்று கூறிய அவர், ‘சர்வாதிகாரி’, ‘பகற்கொள்ளையன்’ என்று தாமே கூறிய மஹிந்தவை, மீண்டும் பதவியில் அமர்த்தியுள்ளார்.

தம்மைக் கொலை செய்வதற்கு, ஒரு சிலர் சதி செய்வதாகவும் ஐ.தே.க அதைப் பற்றி விசாரணை செய்யவில்லை என்றும், அதனால் தாம் இந்த நடவடிக்கையை எடுத்தாகவும் கூறுகிறார். அது சொந்த நலன் சார்ந்த முடிவு என்பது, இதிலிருந்து புரிகிறது.

அதேவேளை, கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களின் போது, மஹிந்த அணியினர், மீண்டும் நாட்டில் பதவிக்கு வரப்போவது தெளிவாகத் தெரிந்தது.

அடுத்த பொதுத் தேர்தல், ஜனாதிபதித் தேர்தல் ஆகியவற்றின் போது, மைத்திரியோடு இருக்கும் சிறு எண்ணிக்கையிலான ஆதரவாளர்களிலும் வாக்காளர்களிலும் பொரும்பாலானோர் மஹிந்தவிடம் போய்விடுவார்கள். இந்த நிலையில், தமது இருப்பை ஓரளவுக்காவது பாதுகாத்துக் கொள்வதாக இருந்தால் மைத்திரி, மஹிந்தவுடன் இணைய வேண்டும்.

அடுத்த தேசிய மட்டத்திலான தேர்தல்கள் வரை, அதற்காகக் காத்திருந்து, தம்மிடம் உள்ளவர்களும் மஹிந்தவுடன் இணைந்ததன் பின்னர், அநாதையாக மஹிந்தவுடன் இணையப் போனால், மஹிந்தவோ அவரது ஆதரவாளர்களோ தம்மை கணக்கிலெடுக்க மாட்டார்கள் என்பது மைத்திரிக்குத் தெரியும்.

ஆதனால், அதற்கு ஒரு வருடத்துக்கு முன்னர், மஹிந்த அணியின் பிரதான போட்டியாளனான ஐ.தே.கவுக்கு ஒரு பலத்த அடியைக் கொடுத்து, மஹிந்த அணியினரைக் குதூகலிக்கச் செய்துவிட்டு, அவர்களின் அங்கிகாரத்தைப் பெற்ற ஜனாதிபதியாக, ஒரு வருட காலம் இருந்துவிட்டு, அவர்களுடன் இணைந்தால், அந்த அங்கிகாரத்துடனேயே அவர் ஒன்றில் ஓய்வு பெறலாம். அல்லது, மஹிந்தவின் பழி வாங்கலில் இருந்து தப்பலாம் என்பது, அவரது நோக்கமாக இருக்கலாம். அநாவசியமாக ஜனாதிபதியுடன் முட்டி மோதியதன் மூலம், ஐ.தே.கவும் அவருக்கு, அதற்குச் சாதகமான நிலைமையை உருவாக்கிக் கொடுத்தது.

மஹிந்த அணியினரும், தமக்கு எதிரான வழக்குகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்காக, மைத்திரியின் அதிரடியை உடனே ஏற்றுக் கொண்டார்கள்.

எனவே, இந்தக் காய்நகர்த்தல்களில், மக்கள் நலனோ, அரசியல் நாகரிகமோ சம்மந்தப்படவில்லை. அநாகரிகமே பண்பாடாகி விட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மறக்க முடியாத உறவு வேண்டுமா? இதோ சில டிப்ஸ்…!!(அவ்வப்போது கிளாமர்)
Next post புஜங்காசனம்!!( மகளிர் பக்கம்)