இலங்கை முன்னாள் தமிழ் எம்.பி.க்கள் குழு டெல்லி வந்தது
கடந்த வாரம் இலங்கையில் இருந்து விடுதலைப்புலிகள் இயக்க ஆதரவு எம்.பி.க்கள் குழுவினர் டெல்லி வந்து, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கப் பலநாட்களாக தவமிருந்தும் சந்திக்க முடியாமல் திரும்பிப் போனார்கள். அதைத்தொடர்ந்து, விடுதலைப்புலிகளின் எதிர்ப்பு அணியை சேர்ந்த முன்னாள் தமிழ் எம்.பி.க்கள் வி.அனந்தசங்கரி (டி.யு.எல்.எப்.), டி.சித்தார்த்தன் (பிளாட்), டி.ஸ்ரீதரன் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) ஆகியோரைக்கொண்ட குழுவினர் இந்தியஅரசின் அழைப்பின் பேரில் நேற்றுஇரவு டெல்லி வந்தனர்.
இன்று அல்லது நாளை அவர்கள் மத்திய வெளியுறவு ராஜாங்க மந்திரி, புதிய வெளியுறவு செயலாளராக அறிவிக்கப்பட்டு இருக்கும் சிவசங்கரமேனன், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் ஆகியோரை சந்தித்து இலங்கை தமிழர் பிரச்சினை பற்றி பேச்சு நடத்துகிறார்கள். முன்னதாக, இன்று சர்வதேச கலாசார மையத்தில் சிந்தனையாளர்களுடன் நடைபெறும் கலந்துரையாடலில் அவர்கள் பங்கேற்கிறார்கள்.