அழகாக வயதாகலாம்!! (மருத்துவம்)

Read Time:18 Minute, 22 Second

‘முதுமையைத் தவிர்க்க முடியாதுதான். ஆண்டொன்று போனால் வயது ஒன்றும் போகும்தான். ஆனால், வயதானாலும் அழகைத் தக்க வைத்துக் கொள்ள முடியும். ஆரோக்கியத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்’ என்று ஆச்சரியம் தருகிறார் சரும நல மருத்துவர் நிதி சிங். ‘எப்படி’ என்ற நம் ஒற்றைக் கேள்விக்கு பதிலாகக் கிடைத்ததுதான் இந்த அழகான கவர் ஸ்டோரி.

‘‘நமக்கு வயதாகிக் கொண்டிருப்பதை முதலில் எடுத்துச் சொல்வது நரை முடி. அடுத்து கண்களைச் சுற்றிலும், நெற்றியின் மேலுள்ள பகுதிகளில் ஏற்படும் சுருக்கங்கள். வயதான தோற்றத்திற்கு காரணமான இந்த சருமப்பிரச்னையை சமாளிக்க எல்லோராலும் எளிதாகப் பின்பற்றக் கூடிய வழிகள் இருக்கின்றன.

வயதாக ஆக முகத்தின் தசைகளுக்கான வேலை குறைந்துவிடுகிறது. குறிப்பாக சிரிப்பது குறைந்துவிடும். எப்போதும், முகத்தை இறுக வைத்துக் கொண்டு, சிந்தனை செய்பவர்களாக ஒரே உணர்ச்சியில் இருப்பதை வயதானவர்களைப் பார்த்தாலே புரியும். மேலும் வயதாகும்போது கண்களுக்கு அடியில் உள்ள எலும்பின் தேய்மானம், தோலின் அடியில் உள்ள இணைப்பு திசுக்கள் சுருங்கி போவது, தோலின் நெகிழ்வுத் தன்மை குறைவு மற்றும் உலர்ந்து போவதாலும், இந்த சுருக்கங்கள் ஏற்படுகின்றன. தவிர, வெயிலில் அலைபவர்களுக்கு வெயிலினால் ஏற்படும் சரும சேதம் மற்றும் புகை பிடிப்பவர்களுக்கும், ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கும் சருமத்தில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன.

பொதுவாக நெற்றி மற்றும் கண்களைச் சுற்றியுள்ள இடங்களில் இருக்கும் சருமமானது, முகத்தின் மற்ற பகுதிகளை விட மெலிதாக இருக்கும். வயதாகும்போது நெற்றியிலும், கன்னங்களிலும் தடிமனாக மாறும். ஆனால், கண்களைச் சுற்றியுள்ள இடங்களில் மிகவும் மெலிந்துவிடும்.

அது மட்டுமில்லாமல் சருமத்தின் அடியில் உள்ள திசுக்கள் சுருங்குவதால், அடியில் உள்ள எலும்பும், தசையும் நன்றாக தெரிய ஆரம்பிக்கும். வயதானவர்களில் சிலருக்கு கண்களின் பக்கவாட்டில் சுருக்கம் இருப்பதை பார்த்திருப்போம். காகத்தின் கால்கள் போல் இருக்கும் இந்த சுருக்கத்திற்கு Crow’s feet என்று பெயர்.

பலருக்கு நெற்றியில் வரிசையாக கோடுகள் இருக்கும். இதற்கு Frontalis என்று பெயர். ஒரு சிலரின் நெற்றியில் புருவங்களுக்கு இடையில் ஒரு கோடு உண்டாகும் அதை Glabellar Frown Lines என்றழைப்பர்’’ என்ற நிதி சிங்கிடம் சுருக்கங்களை நீக்குவதற்கான சிகிச்சைகள் என்னென்ன என்று கேட்டோம்…

‘‘சருமத்தில் சுருக்கம் வராமல் இருக்காது. வயதாகும்போது சுருக்கம் என்பது வரத்தான் செய்யும். ஆனால், அதை தடுத்துக் கொள்ள சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். வெயிலில் செல்பவர்கள் தவறாமல் சன் ஸ்க்ரீன் உபயோகிக்க வேண்டும். சிலர் சரியான அளவில் சன் ஸ்க்ரீன் போடுவதில்லை. ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு ஒரு முறை அப்ளை செய்ய வேண்டும். அதற்காக அதிகப்படியான உபயோகமும் கூடாது. அவரவர் பணியின் தன்மைக்கேற்றவாறு மருத்துவரின் ஆலோசனையோடு சன் ஸ்க்ரீன் லோஷனை உபயோகிக்கலாம்.

வெளியில் செல்லும்போது தூசி, அழுக்கு படிவதால் முகத்தை நல்ல க்ளன்சர்(Facial Cleanser) கொண்டு கழுவ வேண்டும். இதிலிருந்தே க்ளன்சிங், மாய்சரைசிங், சன் ஸ்க்ரீன் இந்த மூன்றும் சரும நலனுக்கு முக்கியமானவை என்று தெரிந்திருக்கும்.

அதேபோல் சுருக்கம் வந்தபின் Botulinum toxin மருந்தை ஊசியின் மூலம் தசைகளில் செலுத்தி, கண்களின் பக்கவாட்டில் உருவாகும் Crow’s feet, நெற்றியில் தோன்றும் Frontal lines அல்லது புருவங்களுக்கு நடுவில் தோன்றும் Glabellar frown lines ஆகியவைகளை சில மாதங்களிலேயே தேவையான அளவு குறைத்துவிடலாம்.

கண்களைச் சுற்றி இந்த சுருக்கங்கள் மட்டும் பிரச்னை இல்லை. சிலருக்கு கண்களின் அருகில் சருமமே கருப்பாக இருக்கும். முக்கியமாக ஒழுங்கான தூக்கம், சரியான உணவுப்பழக்கம் மிக முக்கியம். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். அலர்ஜியால் தும்மல் அடிக்கடி ஏற்படும் தன்மை உடையவர்கள், அரிப்பு ஏற்பட்டு கண்களை அடிக்கடி தேய்த்தால் கூட கண்ணைச் சுற்றி கருவளையம் ஏற்படும். அவர்களுக்கு அலர்ஜியை கட்டுப்படுத்தி கருமையை
குறைக்கலாம்.

சிலருக்கு Kojic acid அல்லது Arbutin போன்ற க்ரீம்களை உபயோகப்படுத்தி ஓரளவு கரு வளையத்தை குறைக்கலாம். இதுதவிர Glycolic acid, Arginine போன்ற பொருட்களை உபயோகித்து Chemical Peel செய்யலாம். Micro needling சிகிச்சை முறையைச் செய்யும்போது சுருக்கங்கள் குறைந்து, சருமம் பளபளப்பாகிவிடும்.

இவையெல்லாவற்றையும் விட, நாம் சில நடைமுறைகளை கடைபிடிக்கவும் வேண்டும். ஒவ்வொரு இரவும் தூங்க செல்லும் முன் மேக்கப்பை நன்றாக கழுவி விட்டு மாய்சரைஸர் க்ரீமை முகத்திலும், கண்களின் பக்கவாட்டு இமைகளிலும் தடவிக்கொள்ளலாம்.
செல்போன்களை அதிக நேரம் பார்ப்பது, நெற்றியைச் சுருக்கி கோபப்படுவது போன்ற செயல்களை தவிர்த்தால், கண்களைச்சுற்றி மற்றும் நெற்றியில் சுருக்கங்கள் விழுந்து விரைவில் வயதான தோற்றம் வருவதைத் தவிர்க்கலாம்.

தோலின் இளமைத் தோற்றத்திற்கு ஊட்டச்சத்துமிக்க உணவுகள் அவசியம். ஆன்ட்டி ஆக்ஸிடன்ட் நிறைந்த காய்கறிகள், பழங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். வைட்டமின் C, E, B3 மற்றும் A நிறைந்த ஆரஞ்சு, சாத்துக்குடி, கொய்யாப்பழம், குடைமிளகாய், முட்டைக்கோஸ் மற்றும் பப்பாளி பழத்தை தினமும் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் ஒரு கிளாஸ் கேரட், வெள்ளரிக்காய், பீட்ரூட் அல்லது ஏதாவது ஒரு பழச்சாறை பருக வேண்டும். முக்கியமாக சருமம் வறண்டு போகாமல் இருக்க தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் பருக வேண்டும்.

நம் உடல் ஆரோக்கியத்திற்கு நமது குடல் ஆரோக்கியம் மிகவும் முக்கியமானது என்கிறது அறிவியல். நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் புளிக்கச் செய்து ஈஸ்ட் உருவாகிய உணவுகள் குடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமாகிறது. Yoghurt, Kefir, Sauerkraut போன்ற புளிக்கச் செய்யப்பட்ட உணவுகள் மற்றும் நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளை உள்ளடக்கிய உணவுகளை எடுத்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் உகந்தது.

யோகாசனப் பயிற்சிகளின் இறுதியில் உடல் தளர் வடைவதற்காக செய்யப்படும் ஒரு ஆசனமே சவாசனம். இந்த யோகாசன நிலையில் இருக்கையில் உடல் தளர்வடைவதாக நாம் நினைக்கிறோம். ஆனால் இந்த நிலை நமது நரம்பு மண்டலத்தை மீட்டமைத்து, புத்துயிர் ஊட்ட உதவியாக இருக்கிறது. இதை சரியாக செய்தால் உடல் தளர்வடைகிறபோது, உடலின் சுவாச நிலையில் மனமானது கவனத்தை செலுத்துகிறது.

சூரிய ஒளி உடலில் படும்படி ஒரு நாளைக்கு 15 நிமிடங்கள் வெளியே செல்வதன் மூலம் இந்த சத்தினை நாம் எளிதாக பெறலாம். இந்த சத்துக் குறைபாடு மிகவும் அரிதாகவே ஏற்படுகிறது. இந்த சத்தினை நீங்கள் போதுமான அளவில் பெறுகிறீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது நல்லது. இந்த வைட்டமின நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுவாக வைத்திருக்கவும், பாஸ்பரஸ் மற்றும் கால்சியம் சத்துக்களை உடல் உறிஞ்சுவதற்கும் உதவுகிறது. மனச்சோர்வினைப் போக்கவும், எலும்புகள் மற்றும் பற்களின் வலுவிற்கும் இது உதவுகிறது.

இன்று பெரும்பாலானோர் நகர்ப் புறங்களில் இயற்கை மூலங்களிலிருந்து விலகி வெகு தொலைவிற்கு சென்றுவிட்டனர். அந்த இயற்கையுடன் நம்மை மீண்டும் இணைத்துக்கொள்ள நேரம் ஒதுக்குவதன் மூலம் நமது மனதுக்கும் ஆன்மாவிற்கும் தேவையான சக்தியை இயற்கையிலிந்து நாம் பெறலாம். உங்கள் கொல்லைப் புறத்திலுள்ள புல்தரையில் வெறும் பாதத்துடன் நடப்பதன் மூலம் உங்கள் கால் விரல்களுக்கு இடையே உள்ள புல்லினை உணர முயற்சிப்பது போன்ற எளிமையான செயல்கள்கூட சிலருக்கு தங்களை இயற்கையோடு இணைக்க போதுமானதாக இருக்கும்.

தொடர்ந்து சருமத்தை சுத்தப்படுத்த வேண்டும். வறண்ட சருமம் உள்ளவர்கள், தங்களின் தினசரி காலை உணவாக ஒரு கப் முளைவிட்ட தானியங்கள் மற்றும் பாதாம் போன்ற கொட்டை வகைகளை சேர்த்துக் கொள்ள வேண்டும். திராட்சை, தேன் கலந்து கூழாக்கி முகத்தில் தடவி 20 முதல் 30 நிமிடங்கள் உலர வைத்து, பின்னர் கழுவ வேண்டும். திராட்சையில் உள்ள Alpha Hydroxy அமிலம் மற்றும் Collagen சுருக்கங்களை நீக்குபவை.
முகத்தைக் கழுவ சோப்பை பயன்படுத்துவதற்குப் பதிலாக சோப்புத் தன்மை இல்லாத ஃபேஸ்வாஷ்களை பயன்படுத்தலாம். இதன்மூலம் நம் சருமத்தில் உள்ள இயற்கையான வழவழப்புத்தன்மை பாதுகாக்கப்படும்.

ஊட்டச்சத்துள்ள உணவுடன் முறையான உடற்பயிற்சியும் செய்ய வேண்டும். இதனால் ரத்த ஓட்டம் அதிகரித்து சருமத்தில் உள்ள செல்களுக்கு ஊட்டச்சத்துக்கள், ஆக்சிஜன் போதிய அளவு கிடைப்பதால் நம் சருமம், பளபளவென ஜொலிக்கும்.

மன அழுத்தம் ஏற்பட ஒவ்வொருவருக்கும் குறைந்தபட்சம் ஏதாவது ஒரு காரணி இருக்கும். மேலும் பலருக்கு இதற்கான காரணிகள் அதிகமாக இருக்கும். மன அழுத்தத்திலிருந்து வெளியே வருவதோடு மனதையும், உடலையும் மீட்டெடுக்க சிறிது நேரம் ஒதுக்க வேண்டியது
அவசியம்.

முதுமைத் தோற்றத்தை தள்ளிப்போடுவதில் மன அமைதியைத் தரும் யோகாவும், தியானமும் முக்கியப் பங்கு வகிப்பவை. டென்ஷனோ, கோபமோ இல்லாமல் மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்வதும் இளமையின் முக்கிய ரகசியம்!’’

Special Tips

* உடல் வலிமையை அதிகரிக்க உதவு கிற உடற்பயிற்சிகள் செய்வதை நம் ஒவ்வொருவருடைய வாழ்வின் ஒரு பகுதியாக அமைத்துக்கொள்ள வேண்டும். இதன் மூலம் நீங்கள் பார்ப்பதற்கு நன்றாக இருப்பதோடு, உங்கள் செயல்களில் சுறுசுறுப்பாக இருக்கவும், உங்கள் வாழ்க்கையை நன்றாக உணர்வதற்கும் இப்பயிற்சிகள் உதவுகிறது. மேலும் வயது தொடர்பான கடுமையான காயங்கள் மற்றும் தசை இழப்பு விகிதமானது குறைகிறது.

* குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒருமுறையாவது யோகா பயிற்சிகள் செய்யலாம். ஆனால், தினசரி செய்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். யோகா பயிற்சிகள் உடல் வலிமை மற்றும் உடல் நெகிழ்வுத்தன்மையை அதிகரிக்கவும், மனநிலை மற்றும் தூக்க முறைகளை மேம்படுத்தவும், சிறந்த வளர்சிதை மாற்றம் மற்றும் எடை இழப்புக்கும் உதவியாக இருக்கிறது.

* பச்சைக் கீரைகளில் வயது முதிர்வைக் குறைக்க உதவுகிற ஊட்டச்சத்துக்களில் முக்கியமான ஒன்றாக வைட்டமின் கே உள்ளது. இந்த வைட்டமின் அளவு குறைவதால் எலும்புகள் பலவீனமாதல், இதய நோய்கள், தமனிகள் மற்றும் சிறுநீரகங்களில் கால்சியம் அளவு அதிகமாதல் போன்ற பிரச்னைகளால் பாதிக்கப்படுவீர்கள். கீரைகளில் குறைவான கொழுப்பு இருப்பதோடு அது சிறந்த பார்வைக்கு உதவுகிறது. மேலும் இது சில புற்றுநோய்களின் ஆபத்துகளைக் குறைக்கிறது.

* உடலுக்கு இதமான மசாஜ் செய்வதன் மூலம் உடல் நரம்பு மண்டலத்தின் பதற்றம் குறையும் அதிசயத்தை நாம் உணரலாம். மேலும் இது நிணநீர் மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தவும் உதவுகிறது.

* மற்ற தசைகளைப் போலவே முகத்திலுள்ள தசைகளும் வயதிற்கு ஏற்ப தளர்வடைந்து சீர்கெடுகிறது. அறுவை சிகிச்சைகள் ஏதும் இல்லாமல் உங்கள் முகத்தின் தசைகள் இளமையாகவும், துடிப்புடனும் இருக்க விரும்பினால், முகத்திற்கான உடற்பயிற்சிகளை வாரத்திற்கு மூன்று முதல் ஐந்து முறை செய்வதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். மேலும் உங்கள் வாழ்க்கையை இன்னும் சிறப்பானதாக மாற்றிக்கொள்வதன் மூலம் நீங்கள் இயற்கையாகவே சிரித்து சந்தோஷமாக இருக்கலாம்.

* கொழுப்பு உடலுக்கு மோசமானது என்றே நாம் பலமுறை கேள்விப்பட்டிருப்போம். இந்த நம்பிக்கைக்கு மாறாக வெண்ணெய், கொட்டைகள் போன்ற உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான நல்ல கொழுப்பினை உடைய உணவுப் பொருட்களை உட்கொள்வது மிகவும் அவசியம். இந்த நல்ல கொழுப்பு மூளையின் ஆரோக்கியத்திற்கு பயனுள்ளதாக இருப்பதோடு, இதய நோய் அபாயத்தையும் குறைக்க உதவுகிறது. முக்கியமாக சரும நலனுக்கு அழகு தர நல்ல கொழுப்பு அவசியம்.

* தூங்கும்போது உங்கள் உடல் மீட்கப்படுவதை உங்களால் உணர முடிவதில்லை. இரவுப் பொழுதில் உங்கள் ஹார்மோன் அளவு உறுதிப்படுத்தப்படுவதோடு, உங்கள் உடல் தன்னை சரிசெய்யும் பணியைச் செய்கிறது. நாம் தூக்கத்தைத் தவிர்ப்பது எளிதானதாக இருந்தாலும், போதுமான அளவு தூக்கத்தைப் பெற வேண்டியது மிகவும் அவசியம்.

* பல வண்ணங்களில் அழகான பழங்கள் மற்றும் காய்கறிகளை நாம் பார்த்திருப்போம். ஒவ்வொரு வண்ணங்களிலுள்ள பழங்கள் மற்றும் காய்கறிகள்
அதற்குரிய தனித்தனியான ஊட்டச்சத்துக்களைக் கொண்டுள்ளது. அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களையும் பெற வேண்டுமென்றால் அனைத்து வண்ணங்களிலுள்ள காய்கறிகள் மற்றும் பழங்களை நமது உணவில் சேர்த்துக்கொள்வது அவசியம்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெண்மை எழுதும் கண்மை நிறமே!! (மகளிர் பக்கம்)
Next post மகாராஷ்டிரா மாநிலம்: பா.ஜ.கவுக்கா, சிவசேனாவுக்கா முதலமைச்சர் பதவி? (கட்டுரை)