நீர்கோவையை நீக்கும் அகத்திகீரை!! (மருத்துவம்)
அகத்திக்கீரை தமிழ்நாட்டில் எளிதில் கிடைக்ககூடிய முக்கியமான கீரை வகைகளில் ஒன்று.. அகத்தியில் பல வகைகள் உள்ளது. அவை சிற்றகத்தி, பேரகத்தி, செவ்வகத்தி, சீமைஅகத்தி. பொதுவாக அதிகம் கிடைப்பது சிற்றகத்தி கீரை தான்.. கீரை என்றாலே உடலுக்கு நன்மை தந்து ஆரோக்கியமாக வாழ செய்யும் மிகச்சிறந்த உணவு.
வைட்டமின் ஏ சத்துகள் நிறைந்து காணப்படும் கீரை அகத்திக்கீரையாகும். புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு ஏற்படும் நுரையீரல் தொந்தரவுகளுக்கு, அகத்திக்கீரை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும். உடல் உள்சூட்டை (பித்தம்) தணிக்கும் மாமருந்து. தொடர்ந்து, சீரான இடைவெளியில் சாப்பிட்டுவர, மலச்சிக்கல் பிரச்னை முற்றிலும் நீங்கும்.
அகத்திக்கீரை கொஞ்சம் கசப்புடன் இருந்தாலும் அதை பருப்புடன் சேர்த்துக் கீரைக் கூட்டாகச் செய்து சாப்பிடலாம். இவ்வாறு செய்து சாப்பிட்டால் செரிமானத் தொந்தரவுகள் அகலும். வயிற்றில் இருக்கும் புழுக்களை நீக்கும் தன்மை கொண்டது.. அகத்திக்கீரைச் சாற்றை, இரண்டு மூன்று சொட்டுகள் மூக்கினுள் விட்டு உறிஞ்சினால், மூக்கடைப்பு, தலைவலி, அடிக்கடி வரும் காய்ச்சல் நீங்கும்.
அகத்திக்கீரைச் சாற்றை தலையில் தேய்த்துக் குளிக்க, மனநிலை பாதிப்புகள் குணமாகும். ஒரு பங்கு அகத்திக் கீரைச் சாறுடன், ஐந்து பங்குத் தேன் சேர்த்து, நன்றாகக் கலந்து, தலை உச்சியில் விரலால் தடவ, குழந்தைகளுக்கு ஏற்படும் நீர்க்கோவை அதாவது சைனஸ் பிரச்னைகள் சரியாகும்.
படர் தாமரை பிரச்சனை உள்ளவர்கள் சீமை அகத்திக் கீரையின் சாற்றை, வயிறு மற்றும் தொடைப் பகுதியில் தடவி வந்தால், விரைவில் குணமாகும். கை கால்களில் காயம் ஏற்பட்டால், அதன் மீது அகத்திக்கீரையை வைத்துக் கட்டினால், காயம் ஆறிவிடும். அகத்திக் கீரையை அடிக்கடி சாப்பிடக் கூடாது. வயிற்றுப்போக்கு மற்றும் சொறி, சிரங்கு முதலான பிரச்னைகள் வர வாய்ப்புகள் அதிகம்.
Average Rating