தண்ணீர் தண்ணீர்!! (மருத்துவம்)
தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும் என்று வழக்கமாகச் சொல்வது வெயில் காலத்துக்கும் பொருந்துமா அல்லது அளவு மாறுமா?
ஐயம் தீர்க்கிறார் குடலியல் மற்றும் இரைப்பை சிகிச்சை மருத்துவர் பட்டா ராதாகிருஷ்ணா…
‘‘மாறும் என்பதுதான் இதற்கான ஒற்றை வார்த்தை பதில். அது ஏன் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக, சில அடிப்படையான விஷயங்களை சொல்லிவிடுகிறேன். ‘3 பங்கு நீர் – ஒரு பங்கு நிலம்’ என்று பூமியைச் சொல்வதைப் போல, நம் எடையும் 3 பங்கு தண்ணீராலேயே படைக்கப்பட்டுள்ளது.
உடல் தனது வழக்கமான பணிகளைச் செய்து ஆரோக்கியமாக இருக்க, இந்த 70 சதவிகித தண்ணீர் அளவு பராமரிக்கப்பட்டுக் கொண்டே இருப்பது அவசியம். அதாவது, நாம் அருந்துகிற தண்ணீர் சிறுகுடல் வழியாக ரத்தத்தில் கலந்து ஒவ்வொரு செல்லுக்கும் சென்று சேர வேண்டும். நாம் தண்ணீர் பருகுவது உடலின் இந்த அடிப்படைத் தேவைக்காகத்தான். இத்துடன் எஞ்சியுள்ள தண்ணீர் சிறுநீரகங்களுக்குச் சென்று வடிகட்டப்பட்டு சிறுநீராகவும் மலமாகவும் வெளியேறிவிடுகிறது.
வியர்வை வழியாகவும், நாம் சுவாசிப்பதன் மூலமாகவும் கணிசமான அளவில் உடலின் தண்ணீர் செலவாகிறது. இந்த தண்ணீர் இழப்பைப் பொருத்தும் நாம் பருக வேண்டிய தண்ணீர் அளவு மாறும். மழை, பனி காலங்களில் உடலின் நீர் இழப்பு குறைவாகவும் வெயில் காலத்தில் அதிகமாகவும் இருக்கும். அதனால்தான் வெயில் காலங்களிலும், அதிகம் வியர்க்கும்போதும் தண்ணீர் தேவை அதிகமாக இருக்கிறது.
வானிலை ஆய்வு மையமே வெயில் பற்றி எச்சரிக்கை விடும் அளவுக்கு இந்த ஆண்டு வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. எனவே, வழக்கமாக 3 லிட்டர் தேவை என்றால் இப்போது 5 லிட்டர் வரைகூட தண்ணீர் தேவைப்படலாம். தாகம் எடுக்கிறது என்பது உடலின் தண்ணீர் தேவையை உணர்த்தும் அறிகுறிதான். அதனால், தாகம் எடுக்கிற அளவு உடலை வறண்டு போக (Dehydration) விடாதீர்கள்.’’
Average Rating