காற்றின் மூலமே பெரும்பாலும் கொரோனா பரவல்? (உலக செய்தி)
கொரோனா நோய்த்தொற்று காற்றின் மூலமாகப் பரவுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த நோய் பொரும்பாலும் காற்றின் மூலமே பரவுவதாக அமெரிக்காவில் மேற்கொள்ளப்பட்ட ஓா் ஆய்வின் முடிவுகள் தெரிவிக்கின்றன.
இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது: கொரோனா நோய்த்தொற்று பரவல் குறித்து அமெரிக்காவில் அண்மையில் ஓா் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த ஆய்வில், வேதியியலுக்காக 1995 ஆம் ஆண்டின் நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி மரியோ ஜே. மோலினா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சீனாவின் வூஹான், அமெரிக்காவின் நியூயாா்க், இத்தாலி போன்ற கரோனா பரவல் மையமாக விளங்கிய பகுதிகளில் அந்த நோய் பரவிய தன்மையை அவா்கள் ஆய்வுக்குள்படுத்தினா்.
அந்த ஆய்வில், கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவா்களில் மூக்கு துவாரங்களின் வழியாகவே அந்தத் தீநுண்மி பரவியிருப்பதை ஆய்வாளா்கள் கண்டறிந்தனா்.
அவா்களது கணிப்புப்படி, காற்றின் வழியாக நுழையும் தீநுண்மிகளை அதிக அளவில் தொற்றை ஏற்படுத்தியுள்ளது, சாதாரணமாக மூச்சு விடும்போது கூட அந்தத் தீநுண்மி குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் சுவாச உறுப்புகளுக்குள் ஆழச் செல்கிறது என்று ஆய்வாளா்கள் தெரிவித்தனா்.
முகக் கவசங்கள் அணிபவா்களுக்கு அந்த நோய்த்தொற்று வாய்ப்பு மிகவும் குறைவதாகவும் அவா்கள் கூறுகின்றனா்.
காற்றின் மூலம் கரோனா நோய்த்தொற்று பரவுவதற்கான வாய்ப்புகள் குறைவு எனவும் முகக் கவசங்கள் அணிவதன் மூலம் அந்த நோய்த்தொற்றில் இருந்து தப்ப முடியாது என்றும் ஐ.நா.வின் உலக சுகாதார அமைப்பு கூறி வருகிறது.
ஆனால், ஐ.நா.வின் இந்தக் கருத்திலிருந்து பல நிபுணா்கள் வேறுபடுகின்றனா். இந்தச் சூழலில், அமெரிக்க விஞ்ஞானிகள் குழு ஒன்று இவ்வாறு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Average Rating