மருந்தே…!! (மருத்துவம்)
மருந்து என்றாலே கசப்பும், பத்தியமும்தான் நம் நினைவுக்கு வரும். ஆனால் வீட்டிலேயே கிடைக்கக்கூடிய சில மருத்துவ குணம் கொண்டவற்றை பிடித்த வகையில் சாப்பிட நோய் தீருவதோடு, அடிக்கடி செய்து சுவைக்கவும் தூண்டும்.
* அத்திப்பழம், பேரீச்சைப்பழம் சமஅளவு எடுத்து அரைத்துக்கொள்ளவும். பனை வெல்லத்தில் பாகு வைத்து அரைத்த விழுது சேர்த்து ஜாம் போல செய்து அடிக்கடி சாப்பிட ரத்த சோகை ஏற்படவே ஏற்படாது.
* செர்ரி பழங்களை பொடியாக நறுக்கி மாதுளைச் சாற்றில் ஊற விடவும். மாலையில் இத்துடன் 1 சிட்டிகை கசகசா பொடியைக் கலந்து சாப்பிட, நன்றாக தூக்கம் வரும். உடல் ரிலாக்ஸ் ஆகும்.
* ரோஜா இதழ்களை நிழலில் காயவைத்துக் கொள்ளவும். அவை நன்கு காய்ந்ததும், ஏலக்காய், சுக்கு சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும். தினமும் இதனை வெதுவெதுப்பான தண்ணீரில் தேன் கலந்து பருகி வந்தால் உடல்சூடு மட்டுமல்ல எடையும் குறையும்.
* பூண்டு, வெங்காயம், தக்காளி, நச்சுக்கொட்டை கீரை சேர்த்து வதக்கவும். இதனுடன் மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து சட்னி செய்து அடிக்கடி சாப்பிட வாதம் மறையும்.
* விருந்து சாப்பிட்ட சிறிது நேரம் கழித்து ஒரு துண்டு நசுக்கிய இஞ்சி, புதினா சேர்த்துத் தயாரித்த டீ (பால் சேர்க்காமல்) குடிக்க வயிறு அமைதி அடையும்.
* பித்தம் அதிகரித்தால் மாதுளம்பழ ஜூஸில் தேன் கலந்து பருகவும்.
* பயத்தம் பருப்பைக் குழைய வேக வைத்து சிறிது வறுத்த கசகசாவைப் பொடித்துப் போட்டுக் கடைசியில் தேங்காய்ப்பால் விட்டுப் பாயசம்போல சாப்பிட அல்சர் குணமாகும்.
* உப்பு, புளி, பெருங்காயம், மிளகு எல்லாவற்றையும் தனித்தனியே சூடான வாணலியில் வறுக்கவும். இதனுடன் கறிவேப்பிலை சேர்த்துத் துவையலாக அரைத்து சாப்பிட வாயு கோளாறு நீங்கிவிடும்.
* பெரிய நெல்லிக்காயுடன் மிளகு சேர்த்து அரைத்து நீர் விட்டு வடிகட்டவும். இதில் தேனைக்கலந்து ஜூஸாகக் குடிக்க, மூக்கடைப்பு விலகும்.
* அருநெல்லிக்காயுடன் உப்பு, 2 மிளகு, 1/4 டீஸ்பூன் சீரகம் வைத்து அரைத்துக் கடைந்த மோருடன் குடிக்க காமாலை குணமாகும்.
* பெரிய நெல்லிக்காய், கறிவேப்பிலை, கரும்புச்சாற்றில் ஊற வைத்து அதனுடன் சீரகம், சிறிது உப்பு கலந்து சட்னிபோல அரைத்து சாப்பிட, இளநரை மறையும்.
Average Rating